டேட்டை தெரிவிக்கிறார்னு வைச்சுக்குவோம். அதனாலே என்ன லாபம், அல்லது நஷ்டம்னு பார்ப்போமா? இது தெரிஞ்சுகிட்டா, உன் சந்தேகம் தீர்ந்துடும். சொல்லு, நீ! உன் காலாவதி நாளை உனக்கு கடவுள் சொல்றாரு, 2099 மார்ச் மாதம் 15 ந்தேதின்னு, அதனாலே உனக்கு லாபமென்ன, நஷ்டமென்னன்னு யோசித்து நாளைக்கு சொல்லு! இப்ப போய் ஜாலியா விளையாடிட்டு வா!"
சரவணன் குதித்துக்கொண்டு ஓடினான்.
" என்னைப்போலவே, நீங்களும் தப்பிச்சிட்டீங்க! ஆமாம், இப்ப அதே சந்தேகத்தை நான் கேட்கிறேன், நீங்க சொல்லுங்க! ஏன் கடவுள் நமக்கு நம்ம இறக்கும் தேதியை முன்னமேயே சொல்லமாட்டேங்கறாரு?"
" மரகதம்! அந்த தேதி தெரிந்தால், நாம எப்படி அதற்கு ரியாக்ட் பண்ணுவோம்னு தெரியலையே! இன்னும் முப்பது வருஷம் வாழப்போறோம்னு சந்தோஷமும் படலாம். இல்லே, இப்போதிருந்தே, அந்த இறுதி நாளை நினைச்சு துக்கமும் அடையலாம். வேடிக்கை என்னன்னா, நம்மைவிட, பக்கத்து வீட்டுக்காரன் பத்து வருஷம் கூடுதலா வாழப்போறான்னு தெரிஞ்சா, அவ்வளவுதான்! கடவுளை நாம எப்படியெல்லாம் திட்டுவோம்னு நமக்கே தெரியாது.
அவருக்கு காதிலே விழாமலிருக்கலாம், ஆனா நம்ம ரத்தக் கொதிப்பு ஏறிடுமே! பக்கத்து வீட்டுக்காரனை பார்க்கவே பிடிக்காதே!
இது ஒரு பக்கம்; இதன் மறுபக்கம், பார்ப்போமா? பக்கத்து வீட்டுக்காரனைவிட நாம அதிகநாள் வாழறோம்னு அவனுக்கு தெரிஞ்சா, அவன் நம்மைக் கண்டாலே எரிந்து விழுவான், சபிப்பான். இது மனித சுபாவம்!
நமக்கு இப்ப இருக்கிறாமாதிரி, அந்த நாள் தெரியலேன்னு வைச்சுக்கோ, இன்னும் எவ்வளவு நாள் வாழப்போறோம்னு தெரியலை, இருக்கிற வரையிலும் ஜாலியா வாழ்வோம்னு நினைக்கலாமே!
பொதுவா, ஒரு விஷயத்தை தெரிஞ்சிண்டால் உள்ள நன்மை, தீமைகள், தெரிஞ்சிக்கலேன்னா உள்ள சாதக பாதகங்கள், அவங்க அவங்க மனநிலையை பொறுத்தது.
மரகதம்! நமக்கே முதுமையிலே தாங்கமுடியாத நோய் வந்தால், என்ன வேண்டிக்கிறோம்? 'இறைவா! என்னை சீக்கிரம் அழைச்சிக்கிட்டு போயேன்'னு கெஞ்சறோம் இல்லையா? அப்படிப்பட்ட நிலையிலே, நாம் மேலும் அஞ்சு வருஷம் இருக்கப்போறோம்னு முன்னமேயே தெரிந்தால், நம்ம வேதனை இரட்டிப்பாகும் இல்லையா?
பிறக்கும்போது, குழந்தை அழுகிறது, நாம் சிரிக்கிறோம், இறக்கும்போது நாம் அழுகிறோம், இறப்பவன் என்ன நினைக்கிறான்னு தெரியாது!