ஶ்ரீமதியும் பிரபாவும் நெருங்கிய தோழிகள். ஒரே கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுள்ளனர். அடிக்கடி இருவரும் தங்கள் பள்ளி நாட்களையும், குறிப்பாக தமிழாசிரியரையும் நினைத்துப் பெருமைப்படுவர்.
அவர் தந்த உற்சாகத்தினாலும் ஆதரவினாலும் இருவரும் கல்லூரி விவாத மேடைகளில் பங்கேற்று மாணவர்களிடையே பெருமையும் புகழும் பெற்றதை நினைத்துக் கொள்வர்.
விடுமுறையில், தங்கள் ஊருக்கு திரும்பியதும், இருவரும் ஆசிரியர் தமிழரசனை நேரில் பார்த்துவர அவர் வீட்டுக்குச் சென்றனர்.
கதவைத் தட்ட கை ஓங்கியபோது, உள்ளேயிருந்து வந்த கூச்சல் காதில் விழவே, பின் வாங்கினர்.
"இத பாருடீ! நான் சொல்கிறபடி கேட்டு அடங்கி ஒடுங்கி இருக்கிறதா இருந்தால், நீ இங்கே என் பெண்டாட்டியா தொடர்ந்து வாழலாம், இல்லைன்னா உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்குப் போவதற்கும் நான் தயங்கமாட்டேன்! புரிந்ததா?"
நிச்சயமாக இந்தக் குரல், ஆசிரியர் தமிழரசனுடையதுதான்!
பெருத்த ஏமாற்றத்துடன், ஶ்ரீமதியும் பிரபாவும் ஆசிரியரை பார்க்காமலேயே வீடு திரும்பினர்!