பார்த்தார். இன்னும் ஒரு ஐந்து நிமிடங்கள் இருந்தன.
" பிரபாவதி சொன்னதையே கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், திருவள்ளுவர் தனது படைப்பில் முதல் அதிகாரத்திலேயே ஆண்களுக்கு, பொதுவாக எல்லோருக்குமே, இறைவனே துணை என்கிறார். ஒரு குறளில்கூட, ஆணுக்கு இறைவனை தொழவேண்டிய தேவையில்லை என்று கூறவேயில்லை. ஆனால், திருமணமான பெண்ணுக்கு இறைவனை தொழவேண்டிய அவசியமில்லை, என்பதைத்தான் 'தெய்வம் தொழாள்' என்று பெண்ணை உயர்த்திப் பேசுகிறார்.
தவிர, அந்தக் குறளிலேயே, பின்பகுதியில், இறைவனின் சக்தி பத்தினிக்கு உண்டு என்பதைத்தான், அவள் 'பெய்' எனச் சொன்னால், மழை பெய்யும் என்று அழுத்தம் கொடுக்கிறார்.
பூமி, ஆகாசம், காற்று, நெருப்பு, நீர் இந்த ஐந்தும் சேர்ந்ததே, உலகம். இந்த ஐந்தில் ஒன்று நீர் அல்லது மழை! பத்தினி ஒருத்தியின் சொல்லுக்கு, அவளது கற்பின் பெருமையால், பஞ்ச பூதங்களும் கட்டுப்படும் என்கிறார், திருவள்ளுவர்!
இந்த அதீத சக்தி எந்த ஆணுக்கும் இருப்பதாக எந்தக் குறளிலும் கூறவில்லை.
தனக்கு தேவையான அனைத்தையும் அன்புடனும் பாசத்துடனும் கணவன் கவனித்துக் கொள்வதால், கணவன் வற்புறுத்தாமலேயே, இல்லை இல்லை, அவன் அறியாமலேயே, மனைவி அவனை தொழுகிறாள். நன்றாக கவனியுங்கள், குறளை! அதில் சொல்லாமல் சொல்லியிருப்பது, மனைவி காலையில் படுக்கையிலிருந்து எழும்போது, கணவன் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறான், மனைவி படுக்கையிலிருந்து எழும்போதே கணவனை தொழுவாள் என்று ஒன்றரை அடி குறளிலே, ஒரு காட்சியையே படைத்திருக்கிறார்.
ஶ்ரீமதி! இந்தக் குறள் இடைச்செருகல் இல்லை என்பது மட்டுமில்லை, திருவள்ளுவர், பெண்களை ஆண்களைவிட, அதிகமாக உயர்வாகப் பேசியிருக்கிறார். பிற்காலத்தில், ஆணாதிக்கம் பெண்களை அடிமைகளாக்கியதும் உண்மை. இன்னமும்கூட, ஓரளவுக்காவது, அந்தநிலை நீடிக்கத்தான் செய்கிறது. ஶ்ரீமதி கூறியது அதைத்தான்.
ஆணும் பெண்ணும் நிகர் எனச் சொன்னான், பாரதி. திருவள்ளுவரோ, பெண்களை தெய்வங்கள்,
என பாராட்டி உயர்த்திப் பேசுகிறார்.
என்னைப் பொறுத்தவரையில், மனைவியை அன்புடன் பண்புடன் சரிநிகராக நடத்தாதவன், மனிதனே இல்லை, மிருகம்!"
இவ்வளவும் நடந்தது, இன்றல்ல, நேற்றல்ல! ஐந்து ஆண்டுகள் முன்பு!
காலப்போக்கில், மாறுதல்கள் எத்தனையோ நிகழ்ந்துவிட்டன.