விரும்புகிறேன்.
'தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள், பெய்யென பெய்யும் மழை'
இக்குறளில், என்னால் ஏற்க இயலாத கருத்து, மனைவி கணவனை தெய்வமாக தொழவேண்டும், அப்போதுதான் அவள் இயற்கையைக்கூட வெல்லும் சக்தி பெறுகிறாள் என்று கூறுகிறது. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து மரியாதையுடன் நடத்துவேண்டுமே தவிர, மனைவி எதற்காக கணவனை தொழவேண்டும்? பெண் என்ன ஆணுக்கு அடிமையா? 'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்' என்று பாரதி கூறியுள்ளதற்கு, குறளில் உள்ள இந்த கருத்து முரண்பாடாக உள்ளதே, இது சரியா?
அதைவிட, கொடுமையானது, கற்புடை பெண்டிர், தெய்வத்தை தொழ தேவையில்லை என்பதுபோல, எடுத்த எடுப்பிலேயே 'தெய்வம் தொழாள்' என்கிறது, குறள்!
இந்த நாட்டின் பண்பாட்டுக்கும் பாரம்பரியத்துக்கும் எதிரான கருத்தில்லையா, இது?
என் சந்தேகம் என்னவெனில், திருவள்ளுவர் இந்தக் குறளை எழுதியிருக்கவே மாட்டார், இந்தக் குறள் ஒரு இடைச் செருகல்! ஆணாதிக்க மனோபாவம் கொண்ட யாரோ ஒரு விஷமி, இடைக்காலத்தில், இந்தக் குறளை செருகியிருக்கவேண்டும் என்பது என் சந்தேகம். இதைப்பற்றி, சக மாணவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்......."
வகுப்பு முழுவதுமே, ஶ்ரீமதியை எழுந்து நின்று கைதட்டி பாராட்டியது.
அடுத்ததாக, கணேசன் மேடைக்கு வந்து கொண்டிருந்தபோது, ஆசிரியர் குறுக்கிட்டார்.
" ஒரு நிமிஷம், கணேசன்! ஶ்ரீமதியின் கருத்தை ஏற்காதவர் எவரோ, அவர் பேசினால், இதர மாணவர்கள், மாறுபட்ட இரு கருத்துக்களையும் சீர்தூக்கிப் பேச உதவியாக இருக்கும்...."
கணேசன் பின்வாங்கினான். வகுப்பில் நிசப்தம்!
சிறிதுநேரம் கழித்து பிரபாவதி தயங்கியவாறே எழுந்தாள். எல்லோருக்கும் வியப்பு! பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?
'பலே! சரியான போட்டி' என சினிமா பாணியில், ஒருவன் குரல் கொடுத்ததும், சற்று துணிவு பெற்றவளாக பிரபாவதி மேடை ஏறினாள்.
" பிரபா! தைரியமா பேசு! எவரும் உன்னை பெண் விடுதலைக்கு விரோதியாக நினைக்கமாட்டார்கள்!"
பிரபா ஆசிரியருக்கு தலை வணங்கி நன்றி செலுத்திவிட்டு தயங்கித் தயங்கி பேசினாள்.
"ஶ்ரீமதி சொன்ன பொருள்தான், அவர் சொன்ன அந்த ஒரு குறளை, மட்டும் படித்தால், நினைக்கத் தோன்றும்.