சிறுகதை - விடுதலை! - ரவை
' விட்டு விடுதலையாகி நிற்பாய்- அந்த
சிட்டுக் குருவியைப் போலே!'
என்ற பாரதியின் பாடலை, ரசித்துப் பாடிக் கொண்டிருந்தார், குடும்பத் தலைவன் கருணாகரன்!
படபடப்புடன் அங்கே வந்து இடுப்பில் கைவைத்து நின்ற அவருடைய மனைவி,
"அவருக்கென்ன விட்டு, பட்டு, சிட்டு, கிட்டுன்னு குடும்பப் பொறுப்பில்லாம, தேசத்துக்கு தன்னை தந்துவிட்டதால், மனைவி செல்லம்மா, குழந்தைகள் தங்கம்மா, சகுந்தலாவை வளர்க்க பட்ட பாடு, என்னைப் போன்ற குடும்பத் தலைவிக்குத் தானே தெரியும், ஆமாம், நானும் தெரியாமல்தான் கேட்கிறேன், உங்க மனசிலே நீங்களும் பாரதின்னு நினைப்பா?"
" கண்ணம்மா! நீ தெரிந்தே கேட்டாலும் என் பதில், இதுதான்!
பாரதிக்கு செல்லம்மா போல, இந்த கருணாகரனுக்கு ஒரு கண்ணம்மா! செல்லம்மா எப்படி பாரதிக்கு எந்தக் கவலையும் தராமல், குடும்பத்தை கவனித்துக் கொண்டாளோ, அதைப்போல, இல்லை இல்லை, அதைவிட சிறப்பா, நீ குடும்பத்தை பார்த்துக்கிறே!
பாரதியாவது ஒரு சமயம் பராசக்தியிடம் 'சின்னக் கவலைகள் என்னை தின்னத் தகாதென்று' வேண்டினான்!
எனக்கு நீ அந்த குறையைக்கூட தராம, பிரமாதமா நம்ம பிள்ளைங்க இல்லை இல்லை, பெண்கள், கமலா, விமலாவை வளர்க்கிறே! உன் முகத்திலே சுடர்விடுகிற அந்த பெருமையை, பூரிப்பை, பார்த்துப் பார்த்து, நான் கர்வப்படறேன், இந்த உலகிலே வேற யாருக்கு இந்தமாதிரி மனைவி கிடைப்பாள்னு......."
" இப்படி ஐஸ் வைச்சே, ஹாய்யா காலத்தை தள்ளிட்டீங்க, முப்பது வருஷமா! கமலா, விமலாவுக்கு இப்ப என்ன வயசுன்னாவது தெரியுமா? பெரியவளுக்கு இருபத்தாறு, சின்னவளுக்கு இருபத்துநான்கு! அவங்களுக்கு காலாகாலத்திலே கல்யாணம் செய்துவைத்து ஒருத்தன் கையிலே பிடிச்சுக் கொடுக்கணுங்கிற கவலையே இல்லாத தகப்பன், உங்களைத் தவிர, வேற யாருமே இருக்க மாட்டாங்க, இந்த லோகத்திலே!"
" உனக்கு தமிழும் வடமொழி சமஸ்கிருதமும் சரளமா வருதுடீ!"
" உங்க தமிழ்ப்பற்றை கொஞ்சம் மறந்துட்டு, பெண்களைப் பற்றி கவலைப்படறீங்களா?"
" கண்ணம்மா! சராசரி பொம்பளைமாதிரி, பேசாதே! நீ எந்தக் காலத்திலே இருக்கே, பெண்களைப் பற்றி கவலைப்படணும்னு உளறாதே! பெண்களைப்பற்றி பெருமைப்படணும்னு சொல்லு!"
" இத பாருங்க, இப்படி பொதுப்படையா பேசி என்னை ஏமாத்தாதீங்க! சொல்லுங்க, உங்க பெரிய பொண்ணு என்ன படிச்சிருக்கா, சின்னவ என்ன படிச்சிருக்கா?"