" ரஹீம்! நம்மை சேர்த்துவைத்த அந்த முண்டாசுக் கவிஞனுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம்......."
" ஐயா! அந்த யுக கவிஞன், பராசக்தியை எந்த அளவுக்கு பக்தியுடன் பாடினானோ, அதே பக்தியுடன் ஏசுநாதரைப்பற்றியும், அல்லாவைப் பற்றியும் பாடியிருக்கிறான். எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன், நம்ம நாடு சுதந்திரம் அடைவதற்கு இருபது வருஷம் முன்பே, அடைந்துவிட்டதாக, குதூகலத்துடன் ஆடிப் பாடினான்! ஐயா! அவன் எட்டயபுரம் மகாராஜாவுக்கு அடங்கிப் போகவில்லை, ஆளுவோரின் அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை, ஏன்?, அவன் பாடினானே, 'காலா! உனைநான் சிறுபுல்லென மதிக்கிறேன், என் அருகே வாடா, சற்றே உன்னை காலால் மிதிக்கிறேன்'னு பாடிய அந்த துணிவு யாருக்கு வரும்?
ஐயா! அவன் முற்றிலும் வித்தியாசமானவன்! ஒருபுறம், தான் ஒரு வேடிக்கை மனிதனாக வாழமாட்டேன்னு சூளுரைத்துவிட்டு, மறுபுறம்
'விட்டு விடுதலையாகி நிற்பாய், அந்த சிட்டுக்குருவியை போலே'ன்னும் பாடினான்.
நாமும் வாழ்வில் கவலைப்படாமல், அஞ்சாமல், அடிமைப்படாமல், மனதை திடமாக வைத்துக்கொண்டு,
'காக்கை, குருவி, எங்கள் சாதி- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்!
காணும் திசையெலாம் நாமன்றி வேறில்லை,
நோக்க நோக்க களியாட்டம்!'னு திடமாக நம்பி வாழ்ந்ததுபோல, நாமும் வாழணும்னு ஆசைப்படறேன், அதற்கு பெரியவங்க உங்களுடைய வாழ்த்துக்கள் வேண்டும்...."
காலைத் தொட்டு வணங்கிய ரஹீமை எழுப்பியவாறே, கருணாகரன் தன் மனைவி கண்ணம்மாவை பார்த்தார். அவள் கண்களில் ஆனந்த பரவசம் சுடர்விட்டது!