மட்டுமா, உன்னைவிட இரண்டு வயது இளையவனான என்னை கணவனா தேர்ந்தெடுத்தது, புரட்சி இல்லையா?"
" அது ஒரு வேகத்திலே நடந்த விபத்துங்க! அந்த அளவுக்கு உங்க களங்கமில்லாத அன்பினாலே, தூய்மையான காதலாலே, பூனையாக இருந்ததை, புலியாக்கினீங்க!
நீங்க அப்போதே, பாரதி பக்தர்! உங்களுக்கு சாதி, மத வேறுபாடே கிடையாது......"
" கண்ணம்மா! எல்லோரும் ஓர் குலம், 'எல்லோரும் ஓர் இனம்' என்பது தமிழர்களின் பாரம்பரியம்!"
" எனக்கு அன்று துணிவை தந்தது, எது தெரியுங்களா? ஒருநாள் நீங்க, மனம் திறந்து சொன்னீங்க, 'கண்ணம்மா! நான் உன்னை நேசிக்கலே, அந்தச் சொல் என் இதயத்தில் உனக்காக பொங்குகிற பிரியத்தை விளக்க போதாது, நான் உன்னை காதலிக்கிறேன், இதற்கு என்ன வித்தியாசம் என்னன்னா, என்னுடைய ஒரே குறிக்கோள், நீ எப்போதும் சந்தோஷமாக இருக்கணும். வேற ஒருவனை கல்யாணம் செய்துகொள்ள பிரியப்பட்டால்கூட, அந்த கல்யாணத்தை நான் மகிழ்ச்சியுடன் செய்துவைத்து, காலமெலாம் உங்களுக்கு உதவியாக இருப்பேன்னு இதயபூர்வமா சொன்னீங்களே, அப்போதுதான் முடிவு செய்தேன், உங்களைவிட ஒரு சிறந்த மனிதர் எனக்கு கணவனாக கிடைக்க முடியாதுன்னு........"
" கண்ணம்மா! உணர்ச்சி வசப்படாதே! யாரோ வருகிறமாதிரி இருக்கு......"
ஆம், அவர்களின் மூத்த மகள், கமலா, யாரோ ஒரு இளைஞனுடன் பிரசன்னமானாள்.
அந்த இளைஞனை முதலில் பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைத்தாள்.
" இவர் பெயர் ரஹீம்! சிறந்த கவிஞர்! அப்பாவைப் போலவே, இவரும் பாரதி அன்பர்! தூய்மையான மனிதர்! எனக்கென்னவோ, இவரை நீங்கள் இருவரும் தெரிந்து உறவாடவேண்டும் என தோன்றியது. ரஹீம்! உட்கார்ந்து பேசிக்கொண்டிருங்கள்! நீங்கள் குடிக்க நீர் கொண்டுவரேன்......."
ரஹீம் இருவருக்கும் வணக்கம் கூறிவிட்டு அமர்ந்தான்.
" ஐயா! கமலா சொன்னதிலே, ஒரு சின்ன திருத்தம்! கமலா உங்களைப்பற்றி, பாரதியின் பாடல்களில் நீங்க ஊறித் திளைத்திருப்பதுபற்றி நிறைய சொன்னதைக் கேட்டதிலிருந்து, எனக்கு உங்களை நேரிலே பார்க்கணும், நீங்க பேசறதை கேட்டுக்கொண்டே இருக்கணும்னு ஒரு ஏக்கம்! அதனாலே நான்தான் பிடிவாதமா கமலாவை இங்கே அழைத்துப் போகச் சொன்னேன்......."
கருணாகரனும் கண்ணம்மாவும், ரஹீமின் ஆத்மார்த்தமான பேச்சைக் கேட்டு, உள்ளம் நெகிழ்ந்தனர்.