" ஹை முனியம்மா! உன் பிள்ளை பச்சையப்பன் நல்லா படிக்கிறானா? அவனை காலேஜ் அனுப்பி பெரிய படிப்பெல்லாம் படிக்கவை! நான் பணம் தரேன்! பராசுரா! அந்த பொறுப்பை நீ ஏற்றுக்கடா! எனக்கு தகவல் தெரிவி! நான் பணம் தரேன்!"
மூச்சு விடாமல் பேசிக்கொண்டே, அவன் வீட்டை சுற்றிச் சுற்றி வந்து குசலம் விசாரித்த அழகிலே மயங்கி நாங்கள் வீட்டுக்குள்ளே கிறங்கி நின்றபோது, வீட்டுக்கு வெளியே ஒரு கூட்டமே காத்து நின்றது, அவனை பார்க்க!
இதை நான் அவனிடம் தெரிவித்தவுடன், அவன் வெளியே வந்து, கூட்டத்துக்கு வணக்கம் கூறி "உங்களையெல்லாம் பார்க்கத்தான், இன்று மாலை டவுன் ஹாலில் மீட்டிங் போட்டிருக்கிறேன், எல்லாரும் அங்கே வந்துருங்க! இப்ப வீட்டுக்குப் போய், உங்க வேலையை கவனியுங்க!"
கூட்டம் கலைந்து சென்றதும், அவன் என் தோளில் கைபோட்டு, என் அறைக்குள் நுழைந்தான்.
நுழைந்த மறுகணமே, அறையின் கதவை தாளிட்டுவிட்டு, திரும்பி என்னை ஆழமாகப் பார்த்து, இறுக கட்டிக்கொண்டு, இதயமே வெடித்துவிடும்போல, அழுதான்.
நானும்தான்!
" பரசுரா! இன்று எனக்கு கிடைத்திருக்கிற புகழ், செல்வாக்கு, பணம், மதிப்பு, மரியாதை எல்லாமே எனக்கு நீ போட்ட பிச்சைடா!"
இதை சொல்லமுடியாமல் சொல்லிவிட்டு, மறுபடியும் கேவிக் கேவி அழுதான்!
நான் அவன் முதுகில் தடவிக் கொடுத்து, ஆசுவாசப்படுத்தினேன். சிறிது நேரம் மௌனம் நிலவியது.
" டேய்! கண்ணை துடைச்சிக்கடா! பழசையெல்லாம் மறந்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வா! ஜாலியா பேசிக்கொண்டிருப்போம். எந்த நேரமும் உனக்கு அழைப்பு வந்துவிடும். அரைகுறையா பேசிவிட்டு திடீர்னு கிளம்பினேன்னா, நம்ம ரெண்டு பேருக்குமே அது ரொம்ப நாளைக்கு வருத்தமாயிருக்கும். அடுத்து நாம எப்போ சந்திப்போம்னு சொல்லமுடியாதுடா........"
" ஓ.கே., டீக் ஹை!"
" என்னடா, இப்ப தமிழைத் தவிர, இந்தி, இங்கிலீஷ் எல்லாம் பிரமாதமா பேசறே! உன் பேட்டிகளையெல்லாம் படிக்கிறபோது, ஊடகங்களிலே பார்த்து கேட்கிறபோதெல்லாம், அசந்து போயிடுவேன்......"
அவன் சிரித்தான்.