"நெசஸிடி ஈஸ் தி மதர் ஆஃப் இன்வென்ஷன்! எப்படி? கரெக்டா பேசறேனா?"
மீண்டும் சிரித்தான்.
நான் அவனை அணைத்து "பிரமாதம்டா! நான் காலேஜிலே படித்து தெரிஞ்சிண்டதைவிட, நீ பேசிப் பழகியே, கற்றுக்கொண்டுவிட்டே!"
" பராசுரா! மாலதி எப்படிடா இருக்கா? என்னைப்பற்றி எப்பவாவது விசாரிப்பாளா? அவளுக்கு கல்யாணம் ஆயிடுத்தா? யாரந்த வில்லன்?"
" அவளுக்கு உன்னைப்பற்றி பேசவோ, நினைக்கவோ, ஏதுடா நேரம்? அவ ரொம்ப பிசியாகிவிட்டா......"
" அப்படியா?"
" அவ இப்ப சினிமா ஸ்டார்டா! உனக்கு விழுந்த லாட்டரி சீட்டுபோல, அவளுக்கும் திடீர்னு அடிச்சுது யோகம்!"
"சந்தோஷமாயிருக்குடா! தமிழ் சினிமாவிலே தானே?"
" தமிழிலே ஆரம்பித்து, தெலுங்கு, கன்னடம் தாவி, இப்ப பாலிவுட் ஸ்டார்டா, அவ!"
" அப்படியா? நான் கேள்விப்படலியே, மாலதிங்கிற பெயரிலே ஹிந்தியிலே ஸ்டாரே கிடையாதே!"
" அவ பேரு இப்ப மாலதி இல்லே, ராணிஶ்ரீ!"
" மை காட்! அவ படங்களை பார்த்திருக்கேனே, அடையாளமே தெரியலியே...."
" நீ பார்த்தபோது, அவ பதினைந்து வயசு, பாவாடை தாவணிப் பொண்ணு, இப்ப அவ, படத்துக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கற கோடீஸ்வரி! அடுத்த மூணு வருஷத்துக்கு, கால்ஷீட் புக் ஆயிடுத்தாம்..........."
"அச்சா! இந்த ஊருக்கு வந்து போறதுண்டா? உன்னிடம் என்னைப்பற்றி விசாரிப்பாளா?"
" அட போடா, இவனே! அவளைப் பார்க்க தயாரிப்பாளர்கள் கியூவிலே காத்திருக்காங்கடா, அவளாவது என்னைப் பார்க்கிறதாவது......."
" டேய்! சொல்ல மறந்துட்டேனே, லண்டனிலே நம்ம குரங்குவை பார்த்தேன், யதேச்சையா, ஷாப்பிங் போனபோது! அவருக்கு அந்தப் பெயரை வைச்சது, நாமதானே?" ன்னு கேட்டுவிட்டு வாய்விட்டு சிரித்தான்.
எனக்கும் அந்தநாள் ஞாபகம் வந்தது.
அந்த ஆசிரியர் பெயர் ரங்கசாமி. தமிழ் ஆசிரியர்! நானும் அவனும் அவரை கிண்டல் பண்ணலாம்னு, யோசித்து, அவரிடம் கேட்டோம்.