சிறுகதை - நல்லதோர் வீணை - ரவை
'முப்பது வருஷம் வாழ்ந்தவனுமில்லை; முப்பது வருஷம் தாழ்ந்தவனுமில்லை!' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள்!
வாழ்வில் சுகமும் துக்கமும் இரண்டும் மாறி மாறி வரும் என்பதைத்தான் இந்த பழமொழிமூலம் வலியுறுத்துகிறார்கள்!
இதை நம்பி எண்பத்தைந்து ஆண்டுகளாக வாழ்பவளின் சரித்திரத்தை கொஞ்சம் கேளுங்களேன்:
1934ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசிநாள் உப்பிலியப்பன்கோவில் நடுத்தெரு நாலாம் நம்பர் வீட்டின் வாசலில், ஆம்புலன்ஸ் வந்து நின்றதும், அதில் உள்ளேயிருந்து கர்ப்பிணி அம்புஜம்மாள் அவளது நான்காவது பிரசவத்துக்கு, ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுத்துவரப்பட்டு, வேனில் ஏற்றப்பட்டாள்.
கும்பகோணம் மருத்துவமனை நோக்கி வேன் விரைந்தது. அதில் அமர்ந்திருந்த கர்ப்பிணியின் கணவர் பிரகலாதன், குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாதனை வேண்டிக்கொண்டே சென்றார்.
முதல் மூன்று பிரசவமும் எந்த சிக்கலுமின்றி, உள்ளூரிலேயே நடந்து, கேசவன், ஶ்ரீமதி, ராமன் மூவரும் சுகபிரசவமாயினர்.
அதேபோல, இதுவும் சுலபமாகவே இருக்கும் என அசால்ட்டாக இருந்தபோது, அம்புஜம்மாள் திடீரென ஒருநாள் வயிற்றில் குழந்தையின் அசைவு முற்றிலும் நின்றுவிட்டதாகவும், வலி தாங்கமுடியவில்லை எனவும் தெரிவித்ததும், பிரகலாதன் முடிவெடுத்து, கர்ப்பிணியை கும்பகோணம் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவ மனையில் மறுநாள் விடிகாலையில் பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டதும்தான், பிரகலாதனுக்கு கவலை நின்றது.
ஆனால், அந்த விடுதலை நீடிக்கமுடியாமல், உள்ளிருந்து செய்தி வந்தது,
'சேய் நலம், ஆனால் தாயை காப்பாற்ற முடியவில்லை'!
ஈருடல் ஓருயிராக நேசித்த மனைவியை பலி கொண்ட பச்சை மண்ணை, பிரகலாதன், பார்க்கவே பிடிக்காமல், முகத்தை திருப்பிக் கொண்டார்.
தாயை பலி வாங்கிய சேயை, கேசவன், ஶ்ரீமதி, ராமனும் வெறுத்தனர்.
அந்தப் புதுவரவு, ஒட்டுமொத்த குடும்பத்தாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு, அதற்கு பெயர் சூட்டக்கூட மறுத்தனர்.
நல்லவேளையாக, பிரகலாதனின் சகோதரி சாந்தம்மா, அதன்மீது இரக்கம் காட்டி, அதற்குப் பெயரும் சூட்டினாள்.
ஜெயலட்சுமி!