தேவைப்பட்டது.
கோவிலில் வைத்து எளிமையாக திருமணத்தை நடத்தி, ஜெயாவை கை கழுவினார், பிரகலாதன்!
அவளை கணவன் வீட்டுக்கு அனுப்பும்போது, அவளிடம் தவறாமல் உறுதியாகவும் இரக்கமில்லாமலும் அவர் கூறிய பொன்மொழிகள்:
" இத பார்! உன் கூடப் பிறந்தவங்களையோ, என்னையோ இனி எதற்காகவும் எதிர்பார்க்காதே! எங்களுக்கு எங்க கவலையே, தலைக்கு மேலிருக்கு!
அதனாலே, உன் புருஷன் சொல்றதைக் கேட்டு ஒழுங்கா நடந்துண்டு, மூத்தாள் பிள்ளைகளையும் வளர்த்துண்டு, ஒழுங்காயிரு! நீ உனக்குன்னு குழந்தையை பெற்றுக்காதே! இனி உனக்கு எல்லாமே உன் புருஷன்தான்!"
" சரிப்பா! நீங்க சொல்றபடியே நடந்துக்கிறேன். அப்பா! ஒரு சின்ன வேண்டுகோள்!"
" சொல்லு!"
" இவ்வளவு வருஷமா என் கண்ணிலே காட்டாமலே வைச்சிருக்கீங்களே எங்கம்மாவின் போட்டோ, அதை ஒருமுறை பார்த்துட்டு போறேம்ப்பா!"
துயரம் தொண்டையை அடைக்க, கன்னத்தில் கண்ணீர் பெருக்கெடுத்தோட, அந்த அப்பாவிப் பிறவியின் கெஞ்சல், பிரகலாதனின் மனதை கரைத்துவிட்டது எனச் சொன்னால், அது பொய்!
"இத பார்! உன் புருஷன் உன்னை அழைத்துப்போக காத்திண்டிருக்கார், அதிகநேரம் எடுத்துக்காமல், சட்டுபுட்டுனு பார்த்துட்டு கிளம்பு!"
அந்த போட்டோவைப் பார்த்ததும், அந்த 'துக்கிரி'ப் பெண், வாய்விட்டு அழமுடியாமலும் ஏன் பேசக்கூட முடியாமலும், தன் மனதிற்குள்ளேயே, தாயுடன் பேசினாள்:
" அம்மா! இப்படியெல்லாம் அவமானப்படவா, என்னைப் பெற்றுவிட்டு, நீ போய் சேர்ந்துட்டே! இதற்கு பதிலாக, என்னை பலி தந்துவிட்டு, நீ உயிரோடிருந்திருந்தால், இந்தக் குடும்பமே சந்தோஷத்திலே மிதந்திருக்குமே!
ஊர்வாய்க்குப் பயந்து ஏதோ பெயருக்கு கல்யாணம்னு ஒண்ணு பண்ணி என்னை வெளியே தள்ளிட்டாரு, உன் புருஷன்! ஆமாம், அவரை 'அப்பா'ன்னு அழைக்கக்கூட என் மனம் ஒப்பவில்லை! என்னை அந்த அளவுக்கு அவரும் நீ பெற்ற மற்ற குழந்தைகளும் காயப்படுத்திட்டாங்க! உன்னை, ஓகோன்னு அப்படி இப்படின்னு புகழறாங்களே இவங்க, நீ இவங்களை இப்படி ஈவிரக்கமில்லாத ஜீவன்களாக ஆளாக்கியிருக்கிறதை பார்க்கும்போது, எனக்கு உன்மீது நல்ல அபிப்பிராயமே ஏற்படலியே!
எனக்கு ஒரு விஷயம் உறுதியா தெரிஞ்சுடுத்து!