பெற்றுவிட்டோம், புதுவாழ்வு மலரும் என நம்பியவள், புது வாழ்விலும் தான் ஒரிஜினல் இல்லை, கார்பன் காபிதான் என்பதை அறிந்தபோது, இந்த அளவுக்கா போன பிறவியில் தான் பாபம் செய்தோம் என நம்பமுடியாமல் விக்கித்தாள்.
அவளுடைய வாழ்வு மேலும் சிக்கலானதற்கு காரணம், அவளுடைய கொள்ளை அழகு!
கணவன் குசேலன், பெயரிலும் ஏழ்மையிலும் மட்டும் புராண குசேலன் அல்ல; பணக்கார சிநேகிதன் ஒருவனின் நெருங்கிய நட்பு கிடைப்பதிலும், தான்!
பியூன் குசேலனின் அந்த நண்பன் பணக்காரன் மட்டுமல்ல, அவன் பெயரும் கிருஷ்ணன்!
குசேலனின் பள்ளிக்கூட தோழனாம். பத்தாவது வரை சேர்ந்து படித்தவர்களாம். படிப்பு முடிந்தபிறகும் அவர்களிடையே நட்பை வளர்த்தது, எது தெரியுமா? ஆச்சரியப்படாதீர்கள்! இருவரும் தீவிர ரஜினி ரசிகர்கள்!
ரஜினி ரசிகர் மன்றத் தலைவன், கிருஷ்ணன்! செயலாளர், குசேலன்!
இருவரின் குடும்பங்களுக்கிடையேயும் நெருக்கம் அதிகம். கிருஷ்ணனின் மனைவி பாமாவும் சுந்தரியும் தோழிகளாம். ஏழை-பணக்காரன் வித்தியாசமின்றி பழகுவார்களாம்.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும், குசேலனின் வீட்டுக்கு கிருஷ்ணனும், அதேபோல கிருஷ்ணனின் வீட்டுக்கு குசேலனும் விஜயம் செய்வார்களாம், இரவு-பகல் வேற்றுமையின்றி!
கிருஷ்ணனும் நாற்பது வயதானவனே! 'நாற்பதிலே நாய் குணம்' என்பார்களே, அதை உண்மையாக்க, அவனுக்கு ஜெயாவின் அழகில் ஒரு கிறக்கம்.
அவளுடன் பேசுவதிலும், பழகுவதிலும் கூடுதலான ஆர்வம் காட்டினான். எதையாவது காரணம் காட்டி அவளையும் குசேலனையும் தன் வீட்டுக்கு அழைப்பான். விருந்து வைப்பான். சினிமாவுக்கு இரு தம்பதிகளும் சேர்ந்து போவார்கள்.
துவக்கத்தில் இதை சகஜமாக எடுத்துக்கொண்ட குசேலன், போகப்போக, கிருஷ்ணனின் போக்கை வெறுத்தான். நண்பனை கண்டிக்க முடியாமல், ஜெயாவின்மீது தன் கோபத்தை காட்டினான்.
நண்பன், வீட்டுக்கு வந்தால், அவன் எதிரே நிற்காதே, அவனுடன் பேசாதே, ஏதாவது காரணம் காட்டி வெளியே போய்விடுன்னு ஜெயாவுக்கு தொல்லை கொடுத்தான்.
இதை புரிந்துகொண்ட நண்பன் கிருஷ்ணன், குசேலனின் நட்பை திடுமென முறித்துக்கொண்டான். ரசிகர் மன்ற செயலாளர் பதவியிலிருந்தும், குசேலனை நீக்கிவிட்டான்.
ரசிகர் மன்ற உறுப்பினர்கள் குசேலனிடம், "என்னாச்சு உங்களுக்குள்ளே? திடீர்னு உங்களுக்குள்ளே இத்தனை கடுமையான விரோதம் எப்படி வந்தது?" என கேட்டு குசேலனின் வெறுப்பையும் எரிச்சலையும் அதிகமாக்கினார்கள்.