" ஜெயா! என் செல்வமே! இந்த இரக்கமற்ற அரக்கரிடமிருந்து காப்பாற்றி நான் உன்னை வளர்க்கிறேன். நீ வாழ்வில் ஜெயித்து, இவர்கள் முகத்தில் கரி பூசு! மனிதர்கள் உன்னை ஒதுக்கினாலும், மகேசன் உன்னை அணைத்துக் காப்பான். சரியா?"
ஏதோ அத்தை சொன்னது புரிந்ததுபோல, அந்த பொற்சிலை பொக்கைவாயை திறந்து சிரித்தது!
ஜெயலட்சுமி, குடும்பத்தின் பராமுகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், வருந்தும்போதெல்லாம் அத்தை சாந்தம்மாதான் ஓடிவந்து, அவளை தேற்றி, சாந்தப்படுத்துவாள்.
" ஜெயா! உங்கப்பா, அண்ணன்கள், அக்கா எல்லாருக்கும் உங்கம்மாவிடம் அதீத பிரியம்! உங்கம்மாவும் அவர்களிடம் ஈடாக, பாசம் வைத்திருந்தாள். அதனாலே, உங்கம்மாவின் பிரிவை, அவங்களாலே தாங்கிக்க முடியாமல், அவள் இறந்ததுக்கு காரணம் நீதான்னு தப்புக்கணக்கு போட்டு உன்னை புறக்கணிக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு? உன்னுடைய கொள்ளை அழகும், உன் முகத்தில் கொட்டிக் கிடக்கும் உன் அம்மாவின் சாயலும், அவர்கள் மனதை சீக்கிரமே மாற்றிவிடும், நானும் அவர்களிடம் பேசுகிறேன்..."
சாந்தம்மா, குடும்பத்தை கூட்டிவைத்து பேசினாள்.
" ஏன்டா! உங்களுக்கெல்லாம் அறிவு மழுங்கிடிச்சா? புத்தி பறந்திடிச்சா? ஒரு பச்சைக் குழந்தையை யாராவது வெறுப்பார்களா? அதற்கென்ன தெரியும்? அது என்ன பாவம் செய்தது? பெற்றவளை சாகடிக்கவா அது பிறந்திருக்கு? உங்க எல்லாரையும்விட, அம்புஜத்தின் மறைவு, இந்தக் குழந்தைக்குத் தான்டா, அதிக பாதிப்பு! ஆமாம்டா, பிறந்ததிலிருந்து அது தாய்ப்பால் இல்லாம வளருதுடா! இந்தக் கொடுமையை உங்களுக்கு கொடுக்காத உப்பிலியப்பன், இந்த அப்பாவி பிறவிக்கு கொடுத்து தண்டிக்கிறது போதாதா, நீங்களுமா அதை தண்டிக்கணும்? வாயை திறந்து பேசுங்கடா! பிரகலாதா! அது உன் கடைசி குழந்தைடா! நீயே அதை உதாசீனப்படுத்தினால், அதுக்கு வேற யாருடா ஆதரவு தருவா? ஏய் முண்டங்களா! உங்க கூடப்பிறந்தவளை நீங்களே ஒதுக்கினால், ஊரார் அதை இன்னும் மோசமா நடத்தமாட்டாங்களா? யோசியுங்கடா!"
ஊஹூம்! அந்த அரக்கர்களின் மனதை, கரைக்க முடியவில்லை!
மறைந்த அம்புஜம்மாவின்மீது அவர்களுக்கு அத்தனை பாசம்!
சாந்தம்மாதான், ஜெயாவை தான் பெற்ற குழந்தையாக நேசித்து, உயிரைக் கொடுத்து