உப்பிலியப்பன் என்னை இந்த உலகத்துக்கு, நான் போன பிறவியிலே செய்த பாவங்களுக்கு தண்டனையாக, அனுப்பியிருக்கான்!
முடிந்தவரையில், சமாளிக்கிறேன், முடியலேன்னா, வேற வழியில்லே, உன்னை நேரிலே வந்து பார்க்கிறேன்!"
அவள் கையிலிருந்த போட்டோவை பிடுங்கிக்கொண்டு "கிளம்பு! கிளம்பு!" என விரட்டனவரின் காலில் விழுந்து நமஸ்கரித்து ஆசிகள் பெறப் பிடிக்காமல், ஜெயா தலை குனிந்தவாறு, கணவனின் பின்னால் சென்றாள்.
மறந்தும், திரும்பிப் பார்க்காமல், நடந்தாள்!
பிப்ரவரி கடைசி நாளுக்கும் ஜெயாவுக்கும் இடையே ஒரு பிணைப்பு!
தனது முப்பதாவது வயதில், நாற்பது வயது கணவனின் வீட்டுக்குள் ஜெயா முதல் முறையாக நுழைந்தபோது, அவளை வரவேற்றனர், பன்னிரண்டு வயது ரகுவும் எட்டு வயது பிரபுவும்!
அன்றிரவு கணவன் குசேலன், தனதறையில், ஜெயாவிடம் விரிவாகப் பேசினான்.
" ஜெயா! உன்னுடன் வாழ்க்கையை தொடங்கப்போகிற இந்த முதல்நாளில், நீ தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்களை தெரிவிக்கிறேன்.
முதலாவது, என்னால் இன்னமும், ஏன் என்றுமே, என் முதல் மனைவி சுந்தரியை மறக்கமுடியாது.
அவள் என் உயிர்! அவள் இடத்தை, அவளைவிட நீ ரொம்ப அழகியாக இருந்தாலும், உன்னால் எந்தக் காலத்திலும் நிரப்பமுடியாது.
அதனால், வெளியுலகுக்கு உன் பெயர் ஜெயாவாக இருந்தாலும், நான் உன்னை சுந்தரி என்றுதான் அழைப்பேன். அதை நீ ஏற்றுக்கொண்டே தீரணும். வேறு வழியில்லை.
என்னால் சுந்தரியை மறக்கவே முடியாது. என் மனதை மாற்ற எந்த முயற்சியும் செய்யாதே! செய்தால், நீ தோற்றுப் போவாய்!
இரண்டாவது, என்னைப் போலவே, என் பிள்ளைகளும், சுந்தரியிடம் மிகுந்த பாசம். இன்னமும் இரவில் அவளை நினைத்து இருவரும் அழுகிறார்கள், அதைப் பார்த்து நானும் அழுகிறேன்.
அதனால், அவர்கள் மனதிலும் நீ சுந்தரியின் இடத்தை பிடிக்க முடியாது! அவர்கள் உன்னை 'சித்தி' என்றுதான் அழைப்பார்கள். ஒருநாளும் உன்னை 'அம்மா'ன்னு அழைக்கமாட்டார்கள். அதையும் நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.