அதுபோல, வயதான உங்களை காப்பாற்ற வேண்டிய கடமை, எங்களுக்கும் இருக்கு!
எந்தவிதமான கடமையோ, உறவோ இல்லாவிட்டால்கூட, ஒரு வயதானவங்க, அதுவும் பெண் இனத்தை சேர்ந்தவங்க, ஆதரவு தேடி வந்தால், அவங்களை காப்பாற்ற வேண்டியது, மனிதாபிமானம்!
அம்மா! உங்களை அப்படி நான் அழைக்க உங்க அனுமதியை எதிர்பார்க்கிறேன். அம்மா! நான் தாயை சிறுவயதிலேயே தாயை இழந்து, தகப்பனால் வளர்க்கப்பட்டவன்! ஒரு தாயின் உறவு என்கிற சுகம் எனக்கு வாழ்க்கையிலே கிடைக்கவேயில்லை!
என்மீது இரக்கப்பட்டு, என் ஏக்கத்தைப் போக்க, இறைவனே உங்களை இங்கே அனுப்பியிருக்கிறார்.
உங்களுக்கு சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கித்தந்து, மருத்துவ வசதி செய்துகொடுத்து, கவனிச்சிக்கிற கௌரவத்தை, பெரிய பாக்கியத்தை, எனக்கு கொடுப்பீங்களா?"
என்று பணிவுடன் கூறி, கையை பிடித்து அழைத்துச் சென்று, ஜெயாவை சோபாவில் அமர்த்திவிட்டு, ஃபேனையும் போட்டார், மாப்பிள்ளை மகாதேவன்!
பெற்ற மகள் செல்வி, முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.
கிட்டத்தட்ட இருபது வருடமாக, பெண் வீட்டில்தான், பெண்ணின் இகழ்ச்சியையும் வெறுப்பையும் தாங்கிக்கொண்டு, ஜெயா என்கிற ஜெயலட்சுமி, வாழ்வில் ஜெயிக்காத லட்சுமி, தனக்கு ராசியான பிப்ரவரி கடைசி நாளுக்காக காத்திருக்கிறாள்.
பாவம், மாப்பிள்ளை! தினமும் அவரை செல்வி எதையாவது காரணம் காட்டி, சண்டைக்கு இழுத்து மனம் நோகச் செய்வாள்! உண்மையான காரணம், மாமியாரை வீட்டில் வைத்துக்கொண்டிருப்பதே என்று மாப்பிள்ளைக்கு தெரியும்
இந்த முறை அந்த ராசியான நாள் வரும்போது, தன்னை சாந்தம்மாவிடம் கட்டாயம் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன், காத்திருக்கிறாள் எண்பத்தைந்து வயது கிழவி!
முப்பது வருடம் வாழ்ந்தவனுமில்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்கிறார்களே, அது சோர்ந்து போனவனை தட்டி எழுப்புகிற வெறும் அர்த்தமற்ற ஆறுதல் சொல்தானோ!