" சொல்லுங்க! எனக்கு வயிற்றை புரட்டுகிறது!"
" கதிரவன் சொல்றான், மல்லிகா சின்னவயசிலிருந்தே அந்தப் பையனோட பழகறாளாம், இப்ப அவனை காதலிக்கிறாளாம், இதை அந்தப் பையனையே கதிரவனிடம் நேரில் தெரிவிக்கச் சொல்லி அனுப்பினாளாம்........"
" ஏங்க! உண்மையா இருக்குமோ? கதிரவன் பொய் சொல்லவேண்டிய அவசியமில்லையே!"
" கதிரவனை நானும் நம்புகிறேன், ஆனா அவனிடம் தெரிவித்த பையனை நம்பலாமா என்பதுதான் கேள்வி!"
" ஓ! அதனாலேதான் மல்லிகாவிடமே கேட்கலாம்னு சொல்றீங்களா?"
" ஆமாம்! செண்பகம்!
ஒரு சந்தேகம், நாம் கேட்டால், மல்லிகா உண்மையை சொல்வாளா, உண்மையை மறைத்துவிடுவாளா? அவளிடம் கேட்காமல், வேறுவழிகளில் தெரிஞ்சிக்கலாமா?"
" ஒரு நிமிஷம்! கதிரவன், அந்தப் பையனின் பெயரை சொன்னானா?"
" இல்லையே!"
" கதிரவனிடமே கேட்கலாமே!"
" நல்ல யோசனை! ஆனால், இந்த விஷயம் என் தங்கச்சி காதிலே விழக்கூடாது, அவ துடிச்சுப்போயிடுவா!"
" ஆமாங்க! அவளுக்கு நம்ம ரெண்டு குடும்பங்களும் ஒண்ணா சேரணும்னு ரொம்ப ஆசைங்க........"
" நமக்கும்தான்! சரி, செண்பகம்! இப்போதைக்கு இந்த விஷயத்தைப்பற்றி மல்லிகாவிடம் மூச்சுவிட வேண்டாம், புரிஞ்சுதா?"
" ஆமாங்க! செய்தி வெறும் புரளியா இருந்தால், மல்லிகா வருத்தப்படுவாள்!"
அண்ணாமலை மறுபடியும் தங்கையின் வீட்டுக்கு புறப்பட்டார்.
எது, எங்கே, எப்போது, எப்படி நடக்கும் என நமக்கு தெரியாதே!
அண்ணாமலைக்கு சொந்தமான நான்கு கார்களுக்கு மூன்று டிரைவர்களைத்தான் வேலைக்கு அமர்த்தியிருந்தார்.
நாலாவது காரை அவர் மட்டுமே உபயோகிப்பதால், அவரே அதை ஓட்டிச் செல்வார். குறிப்பாக, அவருடைய தங்கையின் வீட்டுக்குப் போவதற்கு, அந்தக் காரிலே அவரே ஓட்டிக்கொண்டு செல்வார்.
தங்கையின் வீட்டை அடைய, நெடுஞ்சாலையில் சிறிது தூரம் கடக்கவேண்டியிருந்தது.