சிறுகதை - விழியான ஔி நீ! - சகி
காற்றில் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்த திரைச்சீலைகளின் இரைச்சல் அவனது கவனத்தினை முழுதாக ஈர்த்தது. அது கோடைக்காலம் அல்ல, கார் காலமும் அல்ல! அது ஒரு இலையுதிர்காலம்! அங்கு சூழ்ந்திருந்த மரங்கள் அனைத்திலிருந்தும் இலைகள் சருகாய் உருமாறி பூமியின் மேல் விழுந்தன. வசந்தக்காலத்தில் பூக்கள் பூக்கும், கோடைக் காலம் ஆதவனின் ஆட்சியை நிலைநிறுத்தும், கார் காலமோ இயற்கையின் கவலை அனைத்தையும் அழுதுப் புலம்பி, குளிர்காலத்தில் முதிர்வடைந்து, இலையுதிர்காலத்தில் மரணத்து மீண்டும் வசந்தக் காலத்தில் பிறக்கிறது இயற்கை! இறைவன் அனைத்தையும் பாரப்பட்சமின்றி தான் படைத்திருக்கிறான். மனிதனும் ஒரு கட்டத்தில் பிறந்து, வாலிபத்தில் தன்னாட்சியை நிறுத்தி, அகவை ஏற ஏற தனிமைக் கண்டு அழுதுப்புலம்பி, ஆற்றுப்படுத்த ஆளில்லாத வயோதிக்கத்தை அனுபவித்து, இலைகளாய் உதிர்ந்து மரணித்து, புதிய உயிர் தோன்றிட வைக்கிறான்! ஆம்...! ஓர் உயிர் இறந்தால் எங்கோ மறு உயிர் பிறக்கிறது! எவ்வளவு ஒற்றுமை நமக்கும், இயற்கைக்கும்! எனினும் இயற்கை நம்மைப்போன்று மோகத்தால் பீடிக்கப்படவில்லை. இலைகளின் ஓசை அவனது செவிகளில் கூர்மையாக விழுந்தது! யாரும் வரவில்லை இது வெறும் காற்றின் இரைச்சல் தான் என்பதனை ஊகித்தான் அவன்! பல காலங்களாய் அத்தனிமையே அவனுக்கான அனைத்து ஆறுதல்களையும் நல்கிக் கொண்டிருந்தது. கடந்தக்காலத்தில் தொலைந்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தின் நினைவுகளை நினைவூட்டி அது அவன் மனதிற்கு ஆறுதல்களை நல்கிக் கொண்டிருந்தது. அது எப்போதும் அல்ல, கடந்த சில ஆண்டுகளாய் தனிமையை பெரிதும் விரும்பினான். அது அளிக்கும் ஆனந்தத்தை வேறு ஏதும் அளிக்கவில்லை என்பது அவன் நம்பிக்கையாக இருந்தது. நேரம் கடந்துக் கொண்டிருப்பதனை அறிந்த மனம், அவனை உடனடியாக இல்லம் திரும்ப அறிவுறுத்திய போதிலும் அதன் பேச்சினை அவன் மதிக்கவில்லை. ஏதேதோ சிந்தனைகள் அவன் கவனத்தினை ஈர்த்திருக்க, இலை சருகுகளின் மேல் பதிந்த காலடிச் சப்தம் அவன் சிந்தனை ஓட்டத்தினை கலைத்தது.
"யாரு...?யாரு...?" இருமுறை அவன் அழைத்த அழைப்பிற்கு பதிலளிக்க எழுந்தது அந்தக் குரைப்பின் ஒலி.
"பௌவ்..!" என்ற ஓசையில் வந்தவர் யார் என்பதனை ஊகித்துக் கொண்டான் அமன்...அமன் இம்ரான்!
"தேஜா?" அவன் எழுப்பிய வினாவிற்கு அவன் அருகே ஒரே தாவாய் தாவி அருகில் அமர்ந்து அவன் முகத்துடன் தன் முகத்தினை உரசினான் அவன்.
"என்னடா?என்னாச்சு?நேரமாயிடுச்சா?அம்மா அனுப்பினாங்களா?" என்ற வினாக்களுக்கு, பதில்