சிறுகதை - இந்நிலையேன் எனக்கு? - ரவை
உமாநாத் சுற்றுமுற்றும் பார்த்தான். வானத்தைப் பார்த்தான். பூசையறையில் உள்ள சாமி படங்களை பார்த்தான். அவைகளிடம் வாய் திறந்து பேசினான்.
" எனக்கு இந்தத் தனிமை பயமாயிருக்கு, சாமி! கிருபா என்னுடன் வாழ்ந்தவரையில், இந்த வீட்டில் அவளும் நானும் மட்டுமே எனும்போதுகூட, தெரியாத, மிரட்டாத தனிமை, இப்போது பூதாகாரம் எடுத்து உலுக்குகிறதே, சாமி!
கிருபா இறந்தபோது, கூட்டம் கூட்டமாக வந்துபோன உறவினர்களில் ஒருவர்கூட, என்மீது அனுதாபம் காட்டாமல், போனவளைப் பற்றியே புகழ்ந்து தள்ளிவிட்டு, தங்கள் வழியைப் பார்த்துக்கொண்டு போய்விட்டார்கள்.
அது பரவாயில்லை, அந்த நேரத்துக்கு அவ்வளவுதான் எதிர்பார்க்கலாம்.
கிருபா காலமாகி, ஆறுமாதங்கள் கழிந்துவிட்டதே, இப்போதாவது என் தனிமையைக் கண்டு "உமாநாத்! உனக்கு நாற்பது வயசுதானேடா ஆகுது, ஒரு துணை தேடிக்கடா! எத்தனை வருஷம் போனவளை நினைச்சிகிட்டே வாழமுடியும்!" என்று சொல்வார்கள் என எதிர்பார்த்து ஏங்குகிறேன். ஊஹூம்! ஒருத்தர்கூட......,
வந்துபோனால்தானே பேசுவதற்கு! எவரும் என்னை வந்து பார்ப்பதில்லையே!
நான் சற்று கரவத்துடன், உறவினர்கள் எவரையும் இதுநாள் வரையில் மதிக்காமல் வாழ்ந்தது, தவறுதான்!
அதற்குத்தான், சாமி!, நீ தண்டனை தந்துட்டியே, கிருபா, அம்மா ஆகாமலேயே அடக்கமாகிவிட்டாள். அவ போய்ச் சேர்ந்துட்டா! வீட்டிலே ஒரு குழந்தை தவழ்ந்தாலாவது, தனிமை தெரியாது, குழந்தையை கவனித்துக்கொள்ளவேண்டியகாரணத்தை காட்டியாவது இரண்டாம் மனைவியை தேடியிருக்கலாம்!
சாமி! தனிமைக் கொடுமையினால், எனக்கு பைத்தியம் பிடித்தால், அதுக்கு நீதான் பொறுப்பு, ஆமாம், இப்பவே சொல்லிட்டேன்........."
பொங்கிவந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு, சோபாவில் அமர்ந்து, டி.வி.யை 'ஆன்' பண்ணினான்.
'காதலர் தின'த்துக்காக, விசேஷ புரோகிராம்கள்! எல்லா சேனல்களிலும் ஆணும் பெண்ணும் பாட்டுப் பாடி, ஆட்டம் ஆடி, மேலே விழுந்து புரண்டு, முத்தமிடுகிற காட்சிகளை காட்டி, உமாநாத்தின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டன.
டி.வி.யை ஆத்திரத்துடன் 'ஆஃப்' பண்ணிவிட்டு, நியூஸ் பேப்பரை எடுத்தான்.
பக்கத்துக்கு பக்கம், கொலை, கொள்ளை, ரேப், லஞ்சம், ஆள் மாறாட்டம், இப்படியே இருந்ததால் சலிப்புற்று, அதை வீசி எறிந்துவிட்டு, புதிய வார இதழ்களை புரட்டினான்.