" என்ன தம்பீ! என்ன வேணும்?"
" சார்! ஒரு ரிக்வஸ்ட்!"
அவன் ஆங்கிலத்தில் பேசியது, இருவரையும் வியக்க வைத்தது!
" சொல்லுப்பா! உன்னைப் பார்த்தால், படிச்சவன்மாதிரி தெரியுது!"
" உங்களைப் பார்த்தால், ஆபீஸிலே பெரிய ஆபீஸரா இருக்கீங்கபோலத் தோணுது, நீங்க மனசு வைச்சா, எம்.ஏ.பாஸ் பண்ணிட்டு ஓட்டல் சர்வரா வேலை செய்கிற என் தலைவிதியை மாற்றலாம்...."
" அடப்பாவி! ஏன்டா உனக்கு இந்த நிலமை?"
" எங்க குடும்பம் கடலூரிலேயிருக்கு! அம்மா, தங்கை அங்கே இருக்காங்க. போன வருஷம், எங்கப்பா திடீர்னு காலமாயிட்டார். அப்ப நான் எம்.ஏ. படிச்சிண்டிருந்தேன். அவர் மளிகைக்கடை வைத்து வந்த வருமானத்திலே, குடும்பத்தை நடத்தினார்.
அவர் காலமானபிறகு, கடையை ஒருத்தரிடம் அவர் தந்த பணத்தை வாங்கிண்டு விற்றுவிட்டோம்.
கிடைத்த பணத்திலே, ஆறுமாசம் சமாளித்தோம். நான் எம்.ஏ. பாஸ் பண்ணினதும், என் படிப்புக்கேற்ற வேலை கடலூரிலே கிடைக்காதுன்னு நான் மட்டும் இந்த ஊருக்கு வந்தேன். என் படிப்புக்கேற்ற வேலை தேடறதிலே கையிலிருந்த பணமும் கரைந்தது, வேலையும் கிடைக்கலே....நான் அனுப்புகிற பணத்திலேதான், கடலூரிலே அம்மாவும் தங்கையும் பசியை போக்கிக்கணுங்கிற நெருக்கடியிலே, ஓட்டல் சர்வர் வேலை பார்த்து கிடைக்கிற அல்ப சொல்பத்தை அவங்களுக்கு அனுப்பறேன்.....பெரிய ஆபீஸிலே எல்லாம், வேலை கேட்டால், நான் முன்னேறிய சாதியிலே பிறந்திருக்கிறதனாலே, தரமாட்டேங்கறாங்க! என்ன செய்வதுன்னு தெரியலே....."
என்று கண்ணீர் தளும்ப, இருவர் கால்களையும் பிடித்துக்கொண்டான்.
அவனை எழுப்பி உட்காரவைத்துவிட்டு, பூமியும் உமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
கண்ஜாடையிலே பூமி, உமாவிடம் சம்மதம் கேட்டான். உமாவும் தலையசைத்து இசைந்தான்.
" ஏன் தம்பீ! கடலூரிலே சொந்த வீடா?"
" இல்லை, சார்! வாடகை சரியா தரலைன்னு, ஓனர் வீட்டை காலி பண்ணச் சொல்லி நெருக்கறார்......"
" ஒரு யோசனை சொல்றேன், உங்க அம்மாவிடம் கலந்துபேசி, முடிவைச் சொல்லு!