சிறுகதை - எல்லாம் அவன் செயல்! - ரவை
அண்ணாமலை, தன் செவியில் விழுந்ததை, மனதில் அசை போட்டுக்கொண்டே, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
தன் தங்கை மகன் கதிரவன் தன் தந்தையிடம் ரகசியமாக, தாய்க்குத் தெரியாமல், அந்தச் செய்தியை சொன்னதிலிருந்து, கதிரவன் தான் முழுவதும் நம்புவதையே தெரிவிக்கிறான் என்பது புரிகிறது.
ஆனால், அவனுக்கு அதை தெரிவித்தவன், நம்பத் தகுந்தவனா என்று யோசித்தானா?
தன் கம்பெனியில் ஊழியனாக வேலை செய்பவனின் மகன் சொன்னான், என்கிறான் கதிரவன்!
தன் மகளுக்கும் அவனுக்கும் சிறுபிள்ளையிலிருந்தே சிநேகமாமே!
அப்படியானால், அவனை தனக்கும் தெரிந்திருக்கவேண்டுமே!
மகள் மல்லிகாவிடமே கேட்டால்தான் உண்மை தெரியவரும் என்று தீர்மானித்தவாறே, வீட்டிற்குள், "மல்லிகா!" என குரல் கொடுத்தவாறே, நுழைந்தார்.
குரல் கேட்டு, எதிரில் வந்து நின்றதோ, மல்லிகாவின் தாய், செண்பகம்!
" என்ன, வீட்டுக்குள் நுழையும்போதே, அருமை மகளை கூப்பிடுகிறீங்க! அவசர விஷயமா? அவள் வெளியில் போயிருக்கிறாளே!"
" செண்பகம்! உட்கார்! நம்ம மல்லிகாவுக்கு சின்ன வயசிலிருந்தே பழக்கமான பையன் எவனாவது இருக்கானா, உனக்கு தெரியுமா?"
" இப்படி விவரமில்லாமல், மொட்டையா கேட்டால் எப்படிங்க? விவரமா சொல்லுங்க!"
" சரி, கேள்! தங்கச்சி வீட்டுக்கு போயிருந்தேன், இன்னிக்கு ரெண்டிலே ஒண்ணு தெரிஞ்சிண்டு வரலாம்னு!"
" ஆமாம், என்னிடம் அப்படித்தான் சொன்னீங்க!"
" ஆனால், தங்கச்சி வீட்டுக்குள் நுழையும்போதே, என் காதில் ஒரு செய்தி விழுந்தது, அதைக் கேட்டதும், அதிர்ச்சியில், தங்கச்சி வீட்டுக்குள் நுழையாமலே திரும்பிவிட்டேன்......"
" அப்படியா?"
" செண்பகம்! இவ்வளவு நாட்களா, கதிரவன் நம்ம மக மல்லிகாவை கட்டிக்க தயங்கறான், அதனாலே தன் சம்மதம் தெரிவிக்காம தள்ளிப்போடறான்னு நினைச்சேன், ஆனா அவன் ரகசியமா அவனோட அப்பாவிடம் சொன்னதை கேட்டதிலிருந்து, உண்மையிலே அவன் தள்ளிப்போடக் காரணம், நம்ம மக மல்லிகாதான்னு தெரியுது........"
" என்னங்க இது! புதுக் கதையா இருக்கு!"
" செண்பகம்! என் கவலையெல்லாம் இது கதையாக இருக்கணும், நிஜமாகிவிடக் கூடாது என்பதே!"