சிறுகதை - காற்று மாறவில்லை - வின்னி
குளிர்காற்று பலமாக வீசுகிறது. அதைத் தடுத்து திசைதிருப்ப சமீபத்தில் கட்டிடங்கள் இல்லை. ஒருபக்கம் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நூற்றுக் கணக்கான சிலுவைகள். சில புதியவை பல பழையவை. இறந்தபின்னும் தம் செல்வத்தைக் காட்ட பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட சிலரது கல்லறைகள்.
இடுகாட்டின் ஒருபக்க புல்குன்றில் அமர்ந்திருக்கும் டோனிக்கு வயது நாலு. முதியவரின் வளைந்த முதுகை இரு கைகளாலும் கட்டி அணைத்தபடி அவன் இருப்பது தன்னை சிறிது சூடாக்கிக்கொள்ள.
மறுபக்கம், நீளமான தெரு. வாகனங்கள் ஓடியவண்ணம் இருக்கின்றன. காற்றின் சத்தமோ அல்லது கார்களின் வேகத்தின் சத்தமோ, ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் அந்த வயோதிபரை எதுவும் பாதிப்பதாகத் தெரியவில்லை. அவர் கையிலிருந்த புத்தகத்தில் எதையோ டோனிக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்.
அந்த வயதில் டோனிக்கு இறப்பு, பேய், பிசாசு, ஆவி போன்ற விஷயங்கள் தெரியாது. ஒருவரும் சொல்லித்தரவும் இல்லை. தான் இடுகாட்டில் இருப்பதையே அவன் உணரவுமில்லை. ஆனால், அந்த சிலுவைகள் அவனுக்கு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றன.
தனது தோள்பட்டைமீது ஆறுதலாக அவன் வைத்திருக்கும் கைகளை பார்க்கிறார் வயோதிபர். பேரனின் கைகளை தனது கைகளுடன் ஒப்பிடுகிறார் “எப்படி இவ்வளவு விரைவில் தோல் சுருங்கி கரடுமுரடாகிவிட்டது?”.”ஏன் எனக்கு இவ்வளவு விரைவில் வயதாகி விட்டது?”.
அவர் பேரனுடன் அந்த இடுகாட்டில் தினமும் கழிக்கும் அந்த மாலைச் சடங்குகளை எப்படி ஏற்றுக்கொண்டாரோ அப்படியே தனது வாழ்க்கையையும் ஏற்றுக் கொண்டுவிட்டார். காலம் போனது அவருக்குத் தெரியவில்லை!.
இடுகாட்டின் வாயிற்கதவு பலமாக சத்தமிட்டு தனது வருத்தத்தை க்ரீச்! க்ரீச்! க்ரீச்! என்று முறையிடுகிறது, அதற்கும் வயது வந்துவிட்டது!
அதன் சத்தத்தை கேட்டோ என்னவோ தெரியவில்லை வாயிற்கதவைத் திறந்தபடி பல மோட்டார் வாகனங்கள் ஒவ்வொன்றாக உள்ளே நுழைகின்றன. வாயிற்கதவின் வலியும் மறைந்து, சத்தமும் நின்று விடுகிறது. அந்த நீளமான, பளிச்சென்று மினுங்கும், கறுப்புக் காரின் பெட்டிக்குள் இருந்தவருக்கு கதவின் மரியாதை போலும்!
பெட்டியை குழியில் இறக்கும்போது உறவினரின் வலி அதிகரிக்கிறது. சடங்குகள் முடிகின்றன. வந்தவர்கள் சிறிதுநேரம் இறந்தவரைப்பற்றி உரையாடிவிட்டு அங்கிருந்து நகருகிறார்கள். வாகனங்கள் ஒவ்வொன்றாக மறைகின்றன. டோனியும் தாத்தாவும் இப்படிப்பல சடங்குளைப்