சங்கரன் தன்னை இழந்துவிட்டான்.
முடிக்கிவிட்ட இயந்திரமாக, ரம்பாவுடன் நடந்து, அவள் தன் இருப்பிடத்திலிருந்து பெட்டி, படுக்கையை எடுத்துவரும்வரை காத்திருந்து இருவருமாக வீடு திரும்பினர்.
" அங்கேயே நில்லுங்க!" என்று வீட்டு வாசலில், அவர்களை வாணி நிறுத்தியதும், ரம்பா அதிர்ச்சி அடைந்தாள்.
" மறந்துபோச்சா, கொரோனா! இந்த தண்ணியிலே கைகால் கழுவி சுத்தம் செய்துகிட்டு வாங்க!"
அப்பாடா! இவ்வளவுதானா! நிம்மதிப் பெருமூச்சு விட்டாள், ரம்பா!
" ரம்பா! உனக்கு ஒரு அறை உன் உபயோகத்துக்கு தந்துடறேன்! அதிலே உன் பெட்டி, படுக்கையை வைத்துக்கொள்!
இனிமேல், இந்த வீட்டு முழு பொறுப்பும் உன் கையில் தான்! ஏன்னா, எனக்கு உடம்பு சரியில்லை!
நாள் முழுவதும் நான் என் அறையிலே படுத்துக் கொண்டிருப்பேன். ஐயாவும் ஊரடங்கு உள்ளவரையிலும் வீட்டிலேதான் இருப்பார்!
நீங்க ரெண்டு பேரும் எல்லா வேலையும் செய்யணும்!
ஐயா, சமைக்கிற வேலையை பார்த்துப்பார்! நீதான், பாத்திரம் தேய்ப்பது, வீடு சுத்தம் செய்வது, துணி துவைக்கிறது, இஸ்திரி போடறது, எல்லாம் செய்யணும்! சரியா?"
" அம்மா! என்னாலே சும்மாவே இருக்க முடியாது, எல்லா வேலையும் நானே செய்யறேன், சமையலையும் கூட! ஐயாவும் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும்!"
வாணி, ரம்பாவை அணைத்து முத்தமிட்டாள். " என்னங்க! ரம்பா, இனி நம்ம குழந்தை! கல்யாணமாகி பதினைந்து வருஷமாகியும் என் வயிற்றிலே ஒரு புழு, பூச்சிகூட வளரலே, ஹூம் ! நான் வந்த வேளை!
அதனாலே, ரம்பாதான் நம்ம மகள்! அவளுக்கு தகுந்தவனா பார்த்து கல்யாணமும் செய்துவைப்பது, நம்ம பொறுப்பு!
ரம்பா! நீ எங்களைத் தேடிவந்த செல்வம்! இந்த ஒரு நல்லதுக்காக, கொரோனாவுக்கு தேங்க்ஸ்!" சங்கரன், ரம்பா இருவரும் வாணியுடன் சேர்ந்து சிரித்தனர்.
ரம்பாவினால், இவை எதையும் நம்பமுடியவில்லை! ஏதோ ஒரு சூது இதிலிருக்கு! அது என்ன, என்பதை போகப் போக தெரிஞ்சிக்கணும்!
இவர்கள் இருவருமாக ஏதோ ஒரு குற்றம் செய்து இருக்காங்க, எந்த நேரமும் போலீஸிடம் மாட்டிக்கிட்டா, என்னை பலியாடாக்கிடலாம்னு பிளான் பண்றாங்கபோல!