திடீரென, மேனேஜர் குரல் கேட்கவே, தலையை தூக்கிப் பார்த்தான்!
ஜே.கே.யின் பின்புறம் நின்று மேனேஜர் கேட்டார்:
" பலமான யோசனையோ?"
கண்களை திறக்காமல் பின்புறம் நிற்பது யாரென அறியாமல், பதில் தந்தான், ஜே.கே.
" நம்ம மேனேஜரை தாஜா பண்ண, என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன்......."
" ஏன் தாஜா பண்ணனும்?"
" வெங்கி, அவருக்கு பை நிறைய கறிகாய் கொடுத்து, அடுத்த பிரமோஷனை பறித்து விடுவான்னு பயமாயிருக்கு.."
" வெங்கி பறிக்கலே, வேலை நேரத்திலே கண்மூடி நேரத்தை வீண் அடிச்சா, கட்டாயம் பிரமோஷன் போய் விடும், கையைவிட்டு!"
அப்போதுதான், ஜே.கே. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்து எழுந்து நின்றான்.
" சார்! நீங்களா?"
" நானேதான், வாங்க என் ரூமுக்கு!"
மேனேஜர் முன்னேயும் கசாப்பு கடைக்கு போகிற ஆட்டைப் போல பின்னே ஜே.கே.யும், போவதை எல்லா ஊழியரும் வேடிக்கை பார்த்தனர்.
பிரேம், " பாவம்! என்னால், ஜே.கே. இன்று டோஸ் வாங்கப் போகிறான்," என்று சற்று உரக்கவே கூறி மற்றவர் கவனத்தை ஈர்த்தான்
குறிப்பாக, வெங்கி முதலில் வந்து நின்றான்.
" என் பெயர் அடிபடுதே, என்ன விஷயம்?"
" நீ காலைலே, பையிலே மேனேஜருக்கு கறிகாய் தந்து அவரை தாஜா பண்ணினதா கொளுத்திப் போட்டேன்..."
" அடப்பாவி! காலையிலே மேனேஜர் ஆபிஸில் நுழையும் போது, அந்தப் பையுடன்தான் வந்தார். என்னிடம் பேசும் போது, பையை என் அருகே வைத்துவிட்டு, தன் ரூமுக்குப் போய்விட்டார். அதை நான் அவரிடம் கொண்டு கொடுத்து ஜாலியா பேசிண்டே வெளியே வந்தோம்....."
" ஐயையோ! இது தெரியாம, நான் ஏதோ பேச, பாவம்! ஜே.கே. டோஸ் வாங்கறான்......."
மேனேஜர் அறைக்கதவு திறக்கப்படும் ஒலி கேட்டதும், அவரவர் இருக்கையில் அமர, ஜே.கே., எதிர்பார்த்தபடி தலை குனிந்தபடி தன் இடம் வந்து அமர்ந்தான்.
தலை நிமிராமல், வேலை செய்தான். மாலையில் வீடு திரும்பும்போது, பிரேம் ஜே.கே. பின்னே சென்று, "சாரிடா, ஜே.கே.! என்னாலே நீ டோஸ் வாங்கிண்டே....?"