" அப்பா! அம்மா! இது என் வாழ்க்கை! எனக்கு எது சந்தோஷம் தரும் என்பதை நான்தான் தீர்மானிப்பேன்! அதை நிறைவேற்றி, நீங்களும் மகிழுங்கள்!"
" தேனீ! உன் வயதுக்கு ஏற்ப, உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவு எடுக்கிறாய்! அதை நாங்கள் அனுமதிக்க இயலாது! நீதான், எங்கள்மீது நம்பிக்கை வைத்து, ஏற்று நடக்கவேண்டும்."
" மன்னித்துவிடுங்கள், என் முடிவை யாருக்காகவும் நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை, இது உறுதி!"
" நாங்களும் உறுதி யுடன் இறுதியாக சொல்கிறோம், நீ கல்யாணமே செய்துகொள்ள மறுத்து கன்னியாகவே காலம் கழித்தாலும், கவலையில்லை. நீ ஊமையை மணம் செய்து கொள்ள ஒருக்காலும் ஒப்ப மாட்டோம்........"
அந்தக் கணமே, தேனீ, அப்பா, அம்மா, பாட்டியை வணங்கிவிட்டு, வெளியேறியவள்தான், வருடம் நான்கு ஓடிவிட்டது.
என்ன மாய்மாலத்தை செய்தாளோ, தேனீ-அற்புதன் திருமணம் நடந்து, பாட்டியும் தம்பியும் கலந்துகொண்டனர்.
அதன்பிறகு, இந்த வீட்டில், தேனீயை பற்றிய பேச்சே நின்றுவிட்டது.
அதை மீண்டும் துவக்க, தம்பி முருகனின் திருமணப் பேச்சு உதவியது.
பாட்டியும் பேரனும் ஒற்றுமையாக ஒரே குரலில் சொன்னது:
" நடந்தது நடந்துவிட்ட நிலையில், அதை ஏற்று தேனீயை மன்னித்து, அற்புதன்-தேனீயை வீட்டுக்கு அழைக்க வேண்டும். அவள் தொடர்ந்து நம் அன்புக்குள் வரவேண்டும். தேனீக்காக இல்லாவிட்டாலும், அற்புதன் என்கிற உயர்ந்தவனுக்காக கட்டாயம் அவர்களை ஏற்றுக் கொள்ளவேண்டும்."
இதுதான் சிக்கல்! இந்த நிலையில்தான், பாட்டி திரியை கொளுத்திப் போட்டு வேடிக்கை பார்க்கிறாள்.
மாது-மதுரம் சிந்திக்க துவங்கினர். அவர்களும் மகள் தேனீயின் பிரிவை தாங்க முடியாமல் ஒடிந்து நின்றனர்.
" மதுரம்! நம்முடைய வீட்டில் எல்லா செல்வங்கள் நிறைந்திருந்தும், நம்மால் ஒரு வினாடி கூட சந்தோஷம் அனுபவிக்க முடியவில்லை. ஒரே மகன், ஒரே மகள், மகள் திருமணத்தை புறக்கணித்து அழுதோம், இப்போது மகன் திருமணத்தை பார்க்க வழி தெரியாமல் விழிக்கிறோம்."
" ஆமாங்க! ஏதாவது செய்து இந்த முட்டுக்கட்டை அகற்றவேண்டும்......"
" நான் சொல்வதைக் கேளுங்க!"