சிறுகதை - அதிசயம் புரிந்ததேன்? - ரவை
நாலு வருஷம் முன்பு, கோவா விலே, ஒரு விமான விபத்து நடந்து அதில் பயணம் செய்த நூறு பேரில், ஒரே ஒருவரை தவிர, மற்ற அனைவரும் மாண்டனர்.
அது மிகப் பெரிய அதிசயம்தானே? இது கடவுள் செயல்தானே? அந்த ஒருவன் தப்பிப் பிழைக்க வழி செய்த இறைவன், அவன் நிம்மதியாக வாழவும் வழி செய்ய வேண்டும் இல்லையா?
அதுதானே நியாயம்? இறைவன் ஏனோ அதைச் செய்ய தவறிவிட்டான்!
அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேளுங்கள்! இறைவனால் தப்பிப் பிழைத்த ஒற்றை மனிதன், அடியேனே!
விமானத்தில் பயணம் செய்த காரணத்தினால், என் பொருளாதார அந்தஸ்தை உயர்த்திவிடாதீர்கள்!
ஒரு கூரியர் கம்பெனி கடைநிலை ஊழியனாகப் பயணித்தேன். வேடிக்கை என்னன்னா, மற்றவர்கள் அனைவரும் பணக்காரன்கள்.
கூடுதலாக, அவர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடும் கணிசமாக கிடைத்தது.
துரதிர்ஷ்டமாக், உயிர் தப்பியதோடு, சிறு காயமும் படவில்லை!
இதை ஊதி ஊதி ஊடகங்கள் பெரிதாக்கி, எனக்கு நஷ்ட ஈடே இல்லாமல் செய்தனர்.
இறைவன் எனக்கு உயிரையே காப்பாற்றித் தந்ததால், எனக்கு எதுவுமே தேவையில்லை என முடிவு செய்தார்கள்!
இப்படியெல்லாம்கூட நடக்குமா என கேட்காதீர்! நடந்துள்ளதே எனக்கு!
அதை விடுங்க! என் தரித்திரத்துக்கு எத்தனை கொடுத்தாலும், போதாது!
என்னை உலகமே வியந்த அதிசயமாக, கடவுள் காப்பாற்ற, ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே, அதென்ன? என மண்டையை நாலு வருஷம் குடைகிறது!
முதலில் கனவில் மிதந்தேன், எனக்கு ஏதோ சிறந்த எதிர்காலம் ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார், கடவுள் என கற்பனையில் வாழ்ந்தேன்
ஒரு சிறு உயர்வுகூட இதுவரையில் இல்லை! மாறாக, துன்பமே அதிகமாக அனுபவிக்கிறேன்!
செல்வந்தர் வீட்டில் குழந்தைகள் ஒன்றிரண்டு மட்டுமே பிறக்கும். ஏழைகள் குடிலிலோ, படுக்க இடமின்றி தவிக்கும் அளவு குழந்தைப் பேறு!
என் குடும்பத்தில், ஏழு பேர் நாங்கள், பெற்றோர்க்கு!
அப்பாவுக்கு பதிவுத் துறை ஆபீஸில், பியூன் வேலை! சம்பளத்தைவிட, மேல் வரும்படி அதிகம் வரும்!