சிறுகதை - வாழ்க்கை லட்சியம்! - ரவை
உள்ளுணர்வு உறுத்தவே, கோமதி சட்டென படுக்கை விட்டு எழுந்தாள்! பொழுது புலர்ந்துவிட்டது! பூபாளராகம் பாடிக்கொண்டே எழுந்தாள்!
அவள் கையை பிடித்து நிறுத்தினார், கங்காதரன்!
" கோம்ஸ்! இந்தமாதிரி சட்டென படுக்கையிலிருந்து எழுவது, இருதயத்துக்கு கெடுதல்....தவிர, இன்றைக்கு சன்டேதானே, என்ன அவசரம்?"
"எல்லா நாளும் எனக்கு சண்டைதான்"
" நான் அதை சொல்ல வில்லை, இன்று ஞாயிற்றுக் கிழமைதானே? என்றேன்"
" நானும் அதைத்தான் சொல்றேன், எல்லா கிழமை யிலும் பசி வரும், அதை தணிக்க உணவு தயாரிக்க வேண்டாமா....?"
" கோம்ஸ்! இன்னிக்கு ஒருநாள் விரதம் இருப்போமா உபவாசம்?"
" முதல்லே, கோம்ஸ்னு என்னை கூப்பிடறதை விடுங்க, கோம்ஸ்லே துவங்கி 'கோ'விலே முடிஞ்சா, நான் எங்கே போவேன்?"
" 'கோ'க்கு வடமொழி யிலே பசுன்னு அர்த்தம் உண்டு, நீ பசுதானே, பால் தருகிற பசுவாக விருப்பம் இல்லையா?"
" பசு, நமக்கு பால் தருவதற்கு முன்பு, தன் குட்டிக்கு ஊட்டிவிடும், எனக்குத்தான் அந்தப் பேறு இல்லையே.......!"
" சரி சரி, மூட் அவுட் ஆகாதே! உன் வேலையை நீ பார், நானும் எழுந்து என் வேலையை பார்க்கிறேன்.."
" ரிடையராகி இருபது வருஷம் ஆயிடுத்து, உங்களுக்கு என்ன வேலை?"
" வேலைன்னா, ஆபீஸ் வேலை மட்டும்தான் வேலையா?"
" ஓ! தோட்டத்திலே செடிகொடிக்கு தண்ணீர் விடணுமா? ......."
" கிண்டலா? ஆசிரியர் வேலை பார்த்து சிங்கிள் பெட்ரூம் வாங்கறதுக்கே விழி பிதுங்கிடிச்சு...நான் சொன்ன வேலை, பல் துலக்குவது, காபி குடிப்பது, பேப்பர் படிப்பு, டி.வி. நியூஸ் கேட்கறது, இப்படி அடுத்தடுத்து வேலை செய்யறதுக்குள்ளே, நீ மதிய சாப்பாட்டுக்கு கூப்பிடுவே...."
" இப்படி காலைலே பல் துலக்குவதற்கு முன்பே மதிய சாப்பாட்டு நினைவு உள்ளவர் தான், உபவாசம், விரதம், இருக்கலாமான்னு கேட்டதா?"
" நீதான் அதை வேண்டாம்னு தள்ளிட்டியே, சரி, நீ போ! நான் படுக்கையை சரிபண்ணிட்டு வரேன்......"
கங்கா-கோமதி தம்பதியாகி, ஐம்பத்தைந்து வருஷம் ஆயிடுத்து!