அவளோ தன் பதிலை, பாட்டாகப் பாடினாள். 'குறை ஒன்றுமில்லை, மறை மூர்த்தி கண்ணா! குறை ஒன்றும் இல்லை, கண்ணா!'
அவளுக்கு வயது கூடி விட்டாலும், குரல்வளம் ஏதும் குறையவில்லை!
" இந்த மன நிறைவு, குழந்தை உள்ளவனுக்குக்கூட வராது, நமக்கு இருப்பதற்கு காரணம், நமக்குள்ள கடவுள் நம்பிக்கை!"
" ஆமாம், குழந்தைக்கு என்ன வேணும்னு தெரிந்து தாய் தானாகவே ஓடிவந்து பரிந்து ஊட்டுவதுபோல, நமக்கு என்ன வேணுமோ, அதை கொடுப்பான், அவன்! நாம் கேட்கவேண்டிய அவசிய அவசரம் எதுவுமில்லை...."
" கோமதி! பொருத்தம் பார்த்து நம்மை சேர்த்து வைத்தவனுக்கு, குழந்தை தர தெரியாதா? ஏதோ நல்ல காரணத்துக்காகத் தான், தரவில்லை......."
" நாம் இப்படி பேசுவதும் தப்புங்க! ஏதோ மனசிலே குறை இருக்கறதை இப்படி பேசி சமாதானப் படுத்திக் கிறோமோன்னு அவனுக்கு சந்தேகம் வரலாம். இனிமேல் பேசவேண்டாம்....."
" கரெக்ட்! கப்சிப்!" கோமதி குளிக்கச் சென்றாள். கங்காதரன், டி.வி. நியூஸ் கேட்கலானார்.
தொற்று நோய் பரவி நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப் படுவதாகவும், மக்கள், குறிப்பாக முதியோர், வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்னும் அறிவிப்பு, செய்தியாக வந்தது.
கங்காதரனுக்கு சற்று கலக்கம் வந்தது. இருவருமே வீட்டை விட்டு வெளியே போக முடியாவிட்டால், கறிகாய், மளிகை, மருந்து வாங்குவது எப்படி?
கோமதிக்கு சர்க்கரை நோய் பல வருஷமாக இருந்து வருவதால், தினமும் இரு வேளை மாத்திரை சாப்பிட்டு வருகிறாள். அந்த மருந்து மிகவும் அவசியம் ஆயிற்றே, எப்படி தருவிப்பது?
நல்ல வேளையாக, செல்போன் மூலம் மருந்துக் கடைக்கு போன் செய்து, வீட்டுக்கு கொண்டுவரச் சொல்ல, கடைக்கு போன் செய்தார்.
" கடையிலே வேலை செய்கிறவங்க, அவங்க வீட்டிலிருந்து இங்கே வர, போக்குவரத்து எதுவும் இல்லாமல், ஒருவரும் வரலே, நான் மட்டும்தான் இருக்கேன் அதனாலே, நீங்க யாரையாவது அனுப்புங்க...."
கடைக்காரன் சொல்வதும் நியாயம்தான்! இப்போது என்ன செய்வது?
இறைவா! இதென்ன சோதனை?
வீட்டுக் கதவு தட்டப் பட்ட ஒலி கேட்டு, கதவைத் திறந்தார்.
அபார்ட்மெண்ட் ஓனர்கள் சங்க செயலாளர், ஆர்யா!
" சார்! ஏதாவது உதவி வேணும்னா, சொல்லுங்க! நீங்க வெளியே போகாதீங்க!"