கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை
பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தின் எல்லையில் இருக்கும் வயல்வெளிக்கு நடுவில் இருந்த வீட்டை நோக்கி கதிரேசன் தனது தூரத்து பந்து வீட்டிற்கு சென்றுவிட்டு சோர்ந்துப் போய் நடந்து வந்தார், வீட்டு திண்ணையில் அவரின் மனைவி கமலா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு வியந்தார்.
”என்னிக்கில்லா திருநாளா இவள் என்னத்துக்கு இம்புட்டு சந்தோஷமா இருக்கா, வீட்டுக்கு யாராவது விருந்தாளி வந்தாங்களா, 5 வருஷம் கழிச்சி இவள் சிரிக்கறதை இப்பதான் பார்க்கிறேன், ஊருக்கு போய் வந்த அசதியெல்லாம் இவள் சிரிப்பில காணாமலே போயிடுச்சே, என்ன ஏதுன்னு கேட்போம்” என தனக்குள் சொல்லிக் கொண்டே தன் மனைவியிடம் சென்றார். கணவர் வந்தது கூட தெரியாமல் கையில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு அதையே பார்த்தபடி தனக்குதானே சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார் கமலா
”கமலா அடியேய் கமலா” என அழைக்க கமலாவோ வேறு உலகத்தில் இருந்தார், கணவர் அழைப்பது என்ன அவரின் காலடி சத்தம் கேட்டாலே உணர்ந்து கொள்பவர் இன்று அவரே சத்தமாக அழைத்தும் பதில் சொல்லாமல் இருப்பதைக் கண்டு வியந்தவர்
”கமலா” என மனைவியின் தோளை உலுக்கிய பின்புதான் கமலா நிஜ உலகத்திற்கு வந்தார், கணவரைக் கண்டதும் சட்டென அவரின் மகிழ்ச்சி காணாமல் போனது, சட்டென கையில் இருந்த கடிதத்தை புடவை முந்தானைக்குள் மறைத்துக் கொண்டு திருதிருவென விழித்தபடி
”இப்பதான் வந்தீங்களா வாங்க வாங்க” என அழைக்க கதிரேசனோ சந்தேகத்துடன்
”என்ன திருட்டுமுழி முழிக்கற, என்ன விசயம் அப்படி என்னத்த மறைச்சி வைச்சிருக்க, கொடு அதை நான் பார்க்கிறேன்”
“சே சே இல்லைங்க அதெல்லாம் ஒண்ணுமில்லை“