தனது ஸ்கூட்டியில் ஏறியதும் பக்கத்து வீட்டைப் பார்க்க அந்த வீடு பூட்டியிருக்கவும் குழம்பினாள்
”என்ன இது வீடு பூட்டியிருக்கு எங்க போயிருப்பாங்க” என நினைத்துக் கொண்டே பக்கத்தில் இருந்த சூப்பர்மார்கெட் சென்றாள். வழக்கமாக செல்லும் கடை என்பதால் கடைஓனர் மலரிடம் அன்பாகப் பேசினார் அவளும் சிரித்தபடியே பேசிவிட்டு மளிகை சாமான்கள் வாங்கச் சென்றாள். ஒவ்வொரு பொருளாக தேடிக் கொண்டே செல்கையில் ஏதோ ஒரு நெருடல் தோன்ற என்னவென தலையை திருப்பிப் பார்த்தாள். அவளுக்கு பின்னால் சரவணன் வந்துக் கொண்டிருந்தான், அதுவும் நெருக்கமாக வந்துக் கொண்டிருந்தான். சரவணன்தான் என புரிந்தும் மென்மையாகச் சிரித்தவள்
”ராஸ்கல் என்னை பாலோ பண்றியா இருக்கட்டும் இருக்கட்டும் சைட் அடிக்க உனக்கு நேரம் காலம் இடம் கிடைக்கலையா போயும் போயும் மளிகை கடையிலதான் நீ சைட் அடிப்பியாடா” என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க சரவணனோ
”அம்மா இந்த சென்ட்டை வாங்கும்மா, இது ரொம்ப வாசமா இருக்கும் டிவியில விளம்பரத்தில பார்த்தேன்மா, இதை மட்டும் நான் அடிச்சிக்கிட்டா, வாசமா இருப்பேன் மலருக்கு பிடிக்கும்ல அவள் பார்க்கறப்பலாம் நான் அழுக்கா இருப்பேன், இந்த முறை அவள் என்னைப் பார்த்தா குறை சொல்ல மாட்டாம்மா அதை எடுத்துக்கம்மா” என சொல்ல அதைக்கேட்டு மலர் அசந்துவிட்டாள்
”அடப்பாவி இவன் என்னை அவங்கம்மான்னு நினைச்சி பேசிட்டு வரானே, அப்ப ஆன்ட்டி எங்க” என அவள் அக்கம் பக்கம் பார்க்க அவள் அணிந்த புடவையின் நிறத்தில் வைதேகியும் இருந்தார், வேறு இடத்தில் வேறொரு பொருளை வாங்கிக் கொண்டிருக்க அதைக்கண்டவள் நிதானமாக திரும்பி சரவணனை பார்க்க அவன் மலர் இருப்பதைக் கண்டு விக்கித்துப் போனான் அவளோ
”சாருக்கு இந்த சென்ட்தான் வேணுமா ம்”