சிறுகதை - இறுதி வார்த்தை - வோட்டர் சாவித்திரிபாலா - பனபூல் (சு.கிருஷ்ணமூர்த்தி)
அவனுக்கு ஒரு விசித்திரப் பெயர், ரிபுநாஷ். அவனுடைய அண்ணன் பெயர் தமோநாஷ். ஆனால் காலத்தின் கோலம், அவர்களில் எவராலும் எதையும் நாசம் செய்ய முடியவில்லை. அவர்களே தான் நாசமானார்கள். தமோஷ்நாஷ் என்றால் இருளை அழித்தவன் என்று பொருள். ஆனால் ஒரு சிறுதுளி அளவு ஒளி கூட அவனது வாழ்வில் நுழையவில்லை. அவன் "அ, ஆ" கூடக் கற்காமல் முழு முட்டாளாயிருந்தான். அவர்கள் பிராமணப் பையன்கள் என்பதால் அவர்களுக்கு சமஸ்கிருதப் பெயர்கள் இடப்பட்டிருந்தன. அவர்களுடைய தகப்பனார் மோகநாஷ் தர்க்கதீர்த்தா ஒர திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். எல்லாரும் அவரைச் சுருக்கமாக "மோகன் பண்டிதர்" என்று அழைத்தார்கள். இந்தக் காலத்தில் சமூகத்தில் சமஸ்கிருதப் பண்டிதர்களுக்கு முன்போல் மதிப்பு இல்லை. அவர் பரம ஏழை. புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவர் இறந்தபோது தமோ நாஷுக்கு ஆறு வயது, ரிபுநாஷுக்கு வயது மூன்று.
குழந்தைகளின் தாய் சமையல் வேலை செய்து வயிறு வளர்த்தாள். பதினாறு வயதிலேயே தமோநாஷ் பழுத்து விட்டான். ஒரு போக்கிரிக் கூட்டத்துக்குத் தலைவனாகி விட்டான். அவன் பெயர் "தம்னா" ஆகிவிட்டது. அவன் ரவுடித்தனம் செய்து ஏதோ கொஞ்சம் சம்பாதித்தான். சம்பாதித்ததில் ஒரு பகுதியைத் தாயிடம் கொடுத்துவிட்டு மிச்சத்தைக் கொண்டு குஷாலாகக் காலங்கழித்தான். ஆனால் இது நீண்டகாலம் தொடரவில்லை. ஓரிடத்தில் ரவுடித்தனம் செய்யப்போய் கத்திக் குத்துப்பட்டு இறந்துபோனான். ஒரு நாள் அவனது சவம் சிறிது நேரம் நடை பாதையில் கிடந்தது. பிறகு போலீசார் சவப்பரிசோதனைக்காக அதைச் சவக்கிடங்குக்கு எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அந்த உடலைத் தாறுமாறாகக் கிழித்தார்கள். பிறகு சவம் தோட்டிகளின் கைக்கு வந்தது. தமோஷின் அம்மா சவத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. சவத்தை எடுத்து வந்து, ஆட்களைக் கூட்டிப்போய் அதை எரிக்க அவளிடம் பணமில்லை. அவளுக்கு ஏற்கெனவே நான்கு பக்கங்களிலும் கடன். இன்னும் கடன்சுமையை அதிகமாக்கிக்கொள்ள இஷ்டமில்லை அவளுக்கு. தோட்டிகள் சவத்தின் எலும்புகளை எடுத்துக் கழுவி, "உடற்கூறு" கற்கும் மாணவர்களுக்கு அவற்றை விற்றுக் கொஞ்சம் காசு சம்பாதித்தார்கள். இதோடு தமோநாஷின் வரலாறு முடிந்து விட்டது.
தமோநாஷின் தாய் சாவித்திரி அதிகம் அழக்கூட இல்லை. அவளுடைய முகத்தில், கண்களில் நெருப்பு உள்ளூரக் கனன்றது. அது வார்த்தைகளில் வெளிப்படாத, பார்வைக்குப் புலப்படாத,