சிறுகதை - சாரங்க் - அசிந்த்ய குமார் சென் குப்தா (சு.கிருஷ்ணமூர்த்தி)
அம்மா நசீமை அடித்து விட்டாள்.
அம்மா அடித்தால் அடிக்கட்டும், அவனும் ஏன் அடிக்கணும்? அடிக்க அவன் யார்?
நான் ஆடு மாடு வளக்கறேன், வளக்கலே, பயிர் செய்யறேன், செய்யலே, அதிலே அவனுக்கென்ன? நெலம் தரிசாக் கிடந்தா அவனுக்கென்ன? வீட்டுக் கூரையை மாத்தணுமா வேணாமாங்கறது எங்க கவலை. கூரையொழுகினா நாங்க, அம்மாவும் பிள்ளையும் நனைஞ்சிட்டுப் போறோம். யாரும் அவனை வந்து கொடை பிடிக்கக் கூப்பிடப் போறதில்லே.
கோல்பானு, அதாவது அம்மா, "இனிமே கஹ்ராலி எல்லாத்தையும் கவனிச்சுக்குவாரு," என்று சொன்னாள்.
"கஹ்ராலி யாரு?" என்று வெடித்தான் நசீம்.
"அவரு பசையான ஆளு. அஞ்சு ஏக்கர் நெலம் இருக்கு அவருக்கு. கணக்கு வழக்கு, கோர்ட் கேஸ் நெறைய இருக்கு."
"அதனால நமக்கு என்ன வந்தது?"
"அவரை அண்டியிருந்தா நம்ம நெலத்தை நல்லபடி கவனிச்சுக்கலாம், உண்ண உடுக்க கஷ்டப்பட வேண்டாம்.. வீட்டுக்கு ஓலைக் கூரைக்குப் பதிலாத் தகரக்கூரை போட்டுக்கலாம்."
"நமக்கு அதெல்லாம் வேணாம், இந்த ஓட்டைக் குடிசையே நமக்குத் தேவலை. நாம கீரை, கொடிகளைச் சாப்பிட்டுப் பொழைச்சுக்கலாம். நீ அவனை வெரட்டி விட்டுடு."
கஹ்ராலி நசீமை நன்றாக அடித்துவிட்டான். கோல்பானுவும் அவனுடன் சேர்ந்து கொண்டாள்.
அப்பன் மட்டும் உயிரோடிருந்தால் நசீமை இப்படி யாராவது அடிக்க முடியுமா? அவனுடைய அப்பன் வயலில் போய் வேலை செய்யும்படி அவனை ஒரு போதும் கட்டாயப் படுத்த மாட்டான். நசீம் வலையை எடுத்துக்கொண்டு குளங்குட்டைகளில் மீன்பிடிக்கப்