"நீ எந்த உலகத்தில் இருக்க? ஒரு படகை விட்டு வெலகினா வேறெந்தப் படகிலேயும் வேலை கெடைக்காது. சாரங்குகளுக் குள்ளே ரொம்ப ஒத்துமை உண்டு. அதனால் தான் வாயை மூடிக்கிட்டு அடியை வாங்கிக்கிட்டு வேலை நெலைக்கணுமேன்னு கிடக்கேன். ஒரு தடவை வேலை போயிருச்சின்னா வேறே வெனையே வேண்டாம். தண்ணியை விட்டுட்டுப் போய்க் கலப்பையைக் கட்டிக்கிட்டு அழவேண்டியதுதான்!"
"தவிர எந்தப் படகுக்குப் போவே நீ?" பக்கத்திலிருந்த இயாத் அலி கேட்டான். "எல்லாப் படகிலயும் இதே வழக்கந்தான்.
"ஓடிப் போயிட முடியாதா?" நசீமின் கேள்வி.
இதைக் கேட்டு எல்லாரும் சிரித்துவிட்டார்கள். படகின் படிக்கட்டில் தொடங்கி மேலும் மேலும் உயரும் முயற்சியில் தீவிரமாக இருப்பவர்களுக்கு இந்தக் கேள்வி அசட்டுத்தனமாகத் தானே தோன்றும்!
"ஓடிப் போறது அப்படியொண்ணும் சுலபமில்லேப்பா," சீரியஸாகப் பதிலளித்தான் இரண்டாவது மேட்.
"ஒம் பேரு விலாசம் எல்லாம் சாரங்க் துரையோட நோட்டுப் புஸ்தகத்தில் எழுதி வச்சிருக்கு. நீ ஓடிப் போனா ஒம்பேரிலே போலீசுக்குப் புகார் போகும்... நீ சாரங்கோட பையிலிருந்து பர்சைத் திருடிட்டதா, கடிகாரத்தைத் திருடிட்டதா ... கம்பெனி சாரங்கைத்தான் ஆதரிக்கும். கடைசியில் நீ படகிலேருந்து ஜெயிலுக்குப் போக வேண்டியது தான்!"
அப்படியானால் இப்படியேதான், அலுப்பைத் தரும் அலை யோசையைக் கேட்டவாறு, காலங் கழிக்க வேண்டுமா அவன்? சம்பளமில்லை, பற்றிக்கொள்ள எதுவுமில்லை, இப்படியே இரவும் பகலும் அவன் மிதந்து கொண்டே போக வேண்டியது தானா?
"தொரையைக் குஷிப்படுத்து எப்படியாவது! படிக்கட்டு வேலை கிடைக்குமா பாரு."
இன்னும் எப்படித் தான் துரையைக் குஷிப் படுத்துவது? அவன் தினம் சாரங்கின் கை கால்