பார்த்தவாறு அம்மா செத்துப் போன பின் அவளுடைய முகம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்ய முயற்சி செய்தான். இந்தக் கற்பனை அவனுக்குத் தெம்பளித்தது. அடியைத் தாங்கிக் கொள்ளத் திராணி ஏற்பட்டது. "அம்மா," என்று கூவியழக் கூட வழியில்லை அவனுக்கு. அந்த நிலையில் விழும் அடியையெல்லாம் வாங்கிக் கொள்ளத் தானே வேண்டும்!
ஆனாலும் இந்தக் கொடுமைக்குள்ளானவர்கள் சாரங்குக் கெதிராக ஒன்று சேர்வதில்லை. அவர்களுடைய புகாரெல்லாம் கடவுளிடந்தான். படகிலிருந்து விடுதலையும் கிடைக்காது அவர்களுக்கு. எப்போது படிக்கட்டு வேலை கிடைக்கும், எப்போது மேல் தட்டு வேலை, கயிறு இழுக்கும் வேலை, நங்கூரம் பாய்ச்சும் வேலை அல்லது இயந்திர வேலை கிடைக்குமென்று எல்லாரும் காத்திருந்தார்கள்.
சாரங்குக்கு வட்டி கொடுத்தோ, லஞ்சம் கொடுத்தோ, அவனுக்காகத் திருடியோ, அவனிடம் அடிவாங்கியோ அவனிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள அவர்களெல்லாருக்கும் ஆசை.
சாரங்கின் ஆட்சித் திறமை அபாரந்தான்!
🌼🌸❀✿🌷
நசீம் அன்றிரவே ஒரு பிரயாணியின் செருப்புகளைத் திருடினான். ஆனால் சாரங்க் அவற்றைத் தண்ணீரில் எறிந்த விட்டான். "ஆகா, என்ன மூளை ஒனக்கு! நான் அந்தச் செருப்பைப் போட்டுக்கிட்டேன்னா போலீஸ் என்னைப் பிடிக்காதா?" என்று கேட்டான்.
மறுநாள் நசீம் ஒரு பிரயாணியின் தகரப் பெட்டியைத் திருடினான். ஆனால் அதிலிருந்தவை ஏதோ கோர்ட்டு வழக்கு சம்பந்தப்பட்ட காகிதங்கள், பத்திரங்கள், வரவு செலவுக் கணக்கு நோட்டுகள் இவைதாம். அந்தப் பெட்டியும் ஆற்றில் எறியப்பட்டது.
என்ன செய்தும் சாரங்கின் நன்மதிப்பைப் பெறமுடிய வில்லை அவனால். "உன்னால முடியும், முயற்சி செஞ்சுக் கிட்டேயிரு," என்று சாரங்க் தன் பார்வையால் அவனுக்கு ஊக்கமூட்டுவதாகத் தோன்றியது. சாரங்க் நசீமின் அசட்டுத்தனத்துக்காக அவனைக் கோபித்துக் கொண்டாலும் அவனை இப்போதெல்லாம் அடிப்பதில்லை. இதுவே உற்சாகமளித்தது நசீமுக்கு.