படகில் வெளிச்சம் மங்கல். மழை பெய்தால் பயணிகள் நனையாதிருக்கக் கித்தான் கூரையில்லை; ஆண்களும் பெண்களும் தனித்தனியாகத் தங்க அறைகள் இல்லை; ஆனால் தூக்கம் எல்லாருக்கும் வருகிறது. அந்தப் படகில் பிரயாணம் செய்பவர்கள் சீட்டாடியோ, பாட்டுப் பாடிக்கொண்டோ, அரட்டையடித்துக் கொண்டோ இரவைக் கழிக்கும் நடுத்தர மக்கள் அல்லர்; அவர்கள் விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள். அவர்கள் பகலில் கடுமையாக உழைத்துவிட்டு இரவில் மரக்கட்டைபோல் தூங்கு வார்கள்.
அலங்கோலமாகக் கிடந்து தூங்கும்போது ஒரு பிரயாணியின் மடியிலிருந்த பணமுடிச்சு வெளியே வந்து தொங்கிக் கொண்டிருக்கும். நசீம் அதை லாவகமாக எடுத்து விடுவான். அதில் எவ்வளவு பணம் இருக்கிறதென்பதை எண்ணிப் பார்க்கலாம் என்று நினைப்பான். அடுத்த துறையில் இறங்கி ஓடிப் போய்விடலாம் என்று எண்ணுவான். ஆனால் இறுதியில் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப் பட்டவன் போல் அதை எடுத்துப்போய் சாரங்கிடம் கொடுத்துவிடுவான். புலியின் வாயில் போய் விழும் மாடுபோல, சாரங்க் அவனை எப்போதும் அடிக்கிறான், உதைக்கிறான். அவனோடு சிரித்த முகத்துடன் பேசுவதில்லை. அவனுக்குக் கிடைக்கவேண்டிய உரிமையெதுவும் அளிப்பதில்லை. அப்படியும் அவனுக்கு சாரங்கைத் திருப்திப்படுத்துவதில் அவ்வளவு ஆர்வம். சாரங்க் ஊழியர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளத் தூண்டுகிறான், அவர்களுக்கெதிரான கோள்களைக் காது கொடுத்துக் கேட்கிறான். அப்படியும் அவனை குஷிப்படுத்த ஊழியர்களிடையே எவ்வளவு போட்டி! சாரங்கின் அன்பைப் பெறுவதில் ஒருவரையொருவர் மிஞ்சி விட முயற்சி!
"ஏழு ரூவா ஒம்பதரையணா தானா?" மக்பூல் சொன்னான். "இதை வச்சுக்கிட்ட என்ன செய்ய முடியும், கொறஞ்சது நாப்பத்தேழு ரூவாயாவது சேர்றவரையில பிரயோசனமில்லேன்னு நம்ம சாரங்க் துரை சொல்லுவாரு.."
துணிமணி திருடுவதை விடப் பணங்காசு திருடுவது மேல். தங்கம், வெள்ளி, நகை திருட முடிந்தால் அதைவிட நல்லது. இந்தக் காலத்திலே அவற்றுக்குத் தான் மதிப்பு. அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் காகிதப் பணம் வெறும் குப்பை!
இவ்வளவு நாட்களுக்குப் பிறகு நசீமுக்கு ஒரு லுங்கி கிடைத்தது. குடியானவப் பெண்களிடம்