எல்லாரும் கூடப் பிடியுங்க!" மேலேயிருந்து அழுத்தந் திருத்தமாக ஆணையிட்டான் சாரங்க்.
சுழல் விளக்கின் ஒளியில் நசீமின் கண்களில் நீர்த்துளிகள் பளபளத்தன.
மணப்பெண் லதாபாரியில் இறங்கப் போகிறாள். அவள் மெட்டி குலுங்க நடந்து வருகிறாள்.
படகின் வெளிச்சம் மரஞ்செடிகளுக்கு மேலே வெகு தொலைவு வரை பரவியிருக்கிறது. நசீம் படிக்கட்டோடு இணைந்த மூங்கிலைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் மணப்பெண்ணிடம் சொன்னான்,"மூங்கிலைப் பிடிச்சுக்குங்க! இல்லாட்டித் தடுமாறி விழுந்துடுவீங்க."
"வேண்டாம்," என்று சொல்லிவிட்டு மூங்கிலைப் பிடித்துக் கொள்ளாமலேயே முன்னேறினாள் மணப்பெண்.
பின்னாலிருந்து யாரோ நசீமை இடித்தான். திடுக்கிட்டுத் திரும்பினான் நசீம். அவனை நையப் புடைத்தவன் தான் அங்கே நின்று கொண்டிருந்தான். விளக்கொளியில் அவனை அடையாளம் கண்டு கொண்டான் நசீம். அவன் தான் கஹ்ராலி!
கோல்பானு, மணப்பெண், வெளிச்சம்படாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள். போர்த்தியிருந்த போர்வையால் முகத்தை நன்றாக மூடிக்கொண்டிருந்தாள். படகுத் துறையில் வேற்று மனிதர்களின் நடமாட்டம் அதிகம்.
படிக்கட்டை ஒவ்வொரு படியாகத் தூக்கத் தொடங்கினான் நசீம். கரையையடுத்த, குழம்பிய தண்ணீரின் நிழலில் தாயின் வெளிறிய முகத்தைப் பார்த்தான் அவன்.
மேற்புரத்தில் நின்றுகொண்டு சாரங்க் அவனைத் தாராளமாகப் பாராட்டிக் கொண்டிருந்தான். சாரங்கின் வெள்ளை அங்கியும் வெண்தாடியும் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. சூரியன் மாதிரி பளபளத்தது சாரங்கின் முகம்...
-----------------------------