"ஒங்க புள்ளெயா? வேலைக்காரன்னு நெனச்சோம்!" ஒருவன் சொன்னான்.
"வேலைக்காரனா? பொய்! அவன் என் சொந்தப் புள்ளெ! அம்மா இல்லே அவனுக்கு, அவனை அடிச்சது யாரு?"
"அவன் மணப்பெண்ணோட கழுத்து நகையைப் பறிச்சிருக்கான்.."
"பொய்! நிச்சயம் பொய்தான்! வாங்க, நானே போய்க் கேக்கறேன் அந்தப் பொண்ணை!"
சாரங்க் அந்தப் பெண்ணிடம் போய்க் கேட்டான், "ஒங்க நெக்லஸை யாராவது பறிச்சாங்களா?"
மணப்பெண் முகத்தை மூடிக்கொண்டு தாழ்ந்த குரலில் சொன்னாள், "இல்லே. தூக்கக் கலக்கத்திலே அது நழுவி கீழே விழுந்துடுச்சு.."
லதாபாரி படகுத்துறை நெருங்கிவிட்டது. மாப்பிள்ளை வீட்டார் அங்கு தான் இறங்க வேண்டும். படகின் வேகம் குறைந்தது. நங்கூரம் கடகடவென்று கீழே இறங்கியது. துறையில் ஒரு மரத்தோடு கயிறு கட்டப்பட்டது.
"படியை இறக்கு! படியை இறக்கு..! நசீம் எங்கே? அவன் இன்னிக்குப் படிக்கட்டைப் பிடிச்சுக்கட்டும்!" சாரங்க் கத்தினான்.
படகு ஊழியர்களிடையே ஒரே பரபரப்பு. இவ்வளவு சீக்கிரமாக நசீமுக்கு முறையான வேலை கிடைத்துவிட்டதே! திருடி அகப்பட்டுக் கொண்டதில் அதிருஷ்டம் வந்தவிட்டது பயலுக்கு! அகப் பட்டுக் கொள்ளாமல் திருடிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் படிக்கட்டிலிருந்து மேல் தட்டுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை. இந்த நசீம் இன்றைக்குப் படிக்கட்டு, நாளைக்கு மேல்தட்டு, அதற்கு மறுநாள் சுக்கான், அப்புறம் ஒரேயடியாக சாரங்காக, படகுத் தலைவனாக ஆகி விடுவான்!
"பிடிச்சுக்கங்க, பிடிச்சுக்கங்க..! அவன் சின்னப் பையன். அவனால ஒண்டியாத் தூக்க முடியுமா?