கூக்குரல்கள்..
நசீமுக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. படகு சில நாட்களுக் கொருமுறை கனக்தியாவுக்குப் போய்வரும். ஆறு இவ்வளவு சிறியதாக இருக்கும், அதன் தண்ணீர் இவ்வளவு குறைவாக இருக்கும் என்று அவன் நினைத்ததே இல்லை. ஆறு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் போகும், இப்படி வெகு தொலைவு போய்க் கடைசியில் கடலில் சேரும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தான் அவன்.
இருட்டில் தனியாக உட்கார்ந்துகொண்டு தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தான் நசீம். கறுப்புத் தண்ணீரில் மின் மினிகள் போல் பளபளப்பு.. இன்று நள்ளிரவும் படகு கனக்தியாவுக்கு வந்திருந்தது. நசீமுக்குத் தன் வீடு நினைவு வந்தது. ஊஹூம், அவனுக்கு வீடு வாசல் ஏது? அவனுடைய வீடு வாசலாயிருந்தது இப்போது பிசாசு இருக்குமிடம். பழைய நினைவுகள் வந்தன. அம்மாவின் முகம். "எனக்கு அம்மா இல்லை," என்று அவன் நினைத்துக் கொண்டான். அவனுடைய அம்மா எப்போதோ செத்துப் போய்விட்டாள். இந்தக் கறுப்பு நீரில் தெரியும் நிலவு அவனுடைய அம்மாவின் வெளிறிய முகத்தை நினைவூட்டுகிறது..
பெரிய திருட்டு எதுவும் செய்ய முடியாவிட்டாலும் சின்னஞ் சிறு பொருள்களைத் திருடலாமே அவன்..!
பக்கத்துக் கிராமத்திலிருந்து ஒருவன் இளநீர் விற்க வந்தான். நசீம் அவனிடமிருந்த சாரங்குக்காக இரண்டரையணாவுக்கு இரண்டு இளநீர் வாங்கினான். நசீம் படகில் ஏறிய பிறகு படிக்கட்டு தூக்கப்பட்டது. நசீம் சாரங்கிடமிருந்து ஓரணா வாங்கிக் கரையிலிருந்த இளநீர்க்காரனிடம் எறிந்தான்.
"இன்னும் ஒண்ணரையணா?"
நசீம் வாயைக் கோணி அழகு காட்டினான். இளநீர்க் காரன் ஆற்றங்கரைச் சேற்றையள்ளி நசீம் மீது எரிந்தான். அதற்குள் படகு நகர்ந்துவிட்டது. சேற்றின் ஒரு துளிகூட நசீமின் மேல் படவில்லை. சாரங்கும் நசீமும் சிரித்தார்கள்.
இதே மாதிரி பான்ஸ் பாதா மீனும் கய்ரா மீனும் விற்பனைக்கு வரும். அதிலும் கொஞ்சம்