நகைகள் ஏது? அதிகமாகப் போனால் மூக்குத்தி, மோதிரம்.. கையில் கண்ணாடி வளையல், தங்கம் கிங்கம் இல்லை.
இல்லையில்லை, ஒருத்தியிடம் நகை நிறைய இருக்கிறது. ஒரு புதுமணப்பெண் புக்ககம் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் கழுத்தில் தங்க நெக்லஸ், கையில் கங்கணம், காலில் வெள்ளிக் காப்பு, கால் விரலில் மெட்டி. அரக்கு நிறப் புடைவையணிந்த அவள் முக்காடு போட்டுக் கொண்டு ஒரு பக்கம் தூங்குகிறாள். கலியாணத்துக்கு வந்திருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். யார் எங்கேயிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வழியில்லை. இன்று படகில் ஒரே கூட்டம். இந்த கூட்டத்தில் சரியான தருணம் பார்த்துக் காத்திருந்தான் நசீம்.
அவன் மணப்பெண்ணின் மிருதுவான கழுத்தில் கை வைத்தான். அவனுடைய விரல்கள் நடுங்கவில்லை.
ஒரே இழுப்பில் நெக்லஸைப் பறித்துவிட்டான்.
"திருடன், திருடன்!"
நசீம் கூட்டத்தில் முண்டிக்கொண்டு கொஞ்சம் முன்னேறுவதற்குள் பிரயாணிகள் அவனைப் பிடித்து விட்டார்கள். எல்லாரும் அவனை அடிக்கத் துவங்கினர். சரியான அடி. அங்கு வந்து "என்ன விஷயம்?" என்று விசாரிப்பவன் ஒவ்வொருவனும் தன் பங்குக்கு நசீமை உதைத்தான். மணப்பெண் போட்ட கூச்சலில் அவன் நகையை அவளுடைய படுக்கையோரத்திலேயே போட்டு விட்டான். அதனாலென்ன? பெண் பிள்ளையின் உடம்பில் கை வைத்திருக்கிறான்! அவளுடைய நகையைப் பறித்திருக்கிறான்! அடி, உதை! முறை போட்டுக்கொண்டு உதை!
"ஐயோ!" ஓலமிட்டு அழுதான் நசீம்.
நீண்ட அங்கியணிந்த சாரங்க் தலையில் படகுத் தொப்பியும் காலில் செருப்புமாக அங்கே வந்து "என்ன ஆச்சு? எம் புள்ளயை ஏன் அடிக்கிறீங்க?" என்று கேட்டான்.
புள்ளயா? எல்லாரும் திடுக்கிட்டனர். சாரங்கோட புள்ளயா?