சிறுகதை - ராணி பசந்த் - அன்னதா சங்கர் ராய் (சு.கிருஷ்ணமூர்த்தி)
வெகுநாட்கள் காத்திருந்தபின் நீராவிப் படகு கிடைத்தது. சில இடங்களை மேற்பார்வையிடுவது பாக்கியிருந்தது. ஆண்டு முடிவதற்குள் இந்த வேலையை முடித்தாக வேண்டும். இருபுறமும் ஆற்றங்கரைக் காட்சிகள். முன்னால் ராங்கா மாட்டிப் பிரதேசத்தின் மலைவரிசை. கர்ணபூலி ஆற்றில் பயணம் தொடங்கும்போது ரொமான்டிக் உணர்வு ஏற்பட்டது. காகிதமும் பேனாவும் கையோடு எடுத்து வந்திருந்தேன். வெகுநாட்களுக்குப் பிறகு கவிதை எழுதத் திட்டம். படகின் சாரங்க், மாலுமி, மற்ற ஊழியர்கள், என் வேலைக்காரன், சமையல்காரன் இவர்கள்தாம் என் சக பிரயாணிகள். அவர்கள் யாரும் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாதென்று அவர்களுக்கு கடுமையாக உத்தரவிட்டிருந்தேன். மேல்தட்டில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நங்கூரம் தூக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவசர அவசரமாக ஓடிவந்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவரது கையில் ஒரு கடிதம்.
என்ன விஷயம்? மறுபடி என்ன விபத்து நேர்ந்து விட்டது? இவர்கள் என்னை இங்கிருந்து நகர விடமாட்டார்களா என்ன?
கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். அப்படியொன்றுமில்லை. கல்கத்தாவிலிருந்து ஒரு பெரிய போலீஸ் அதிகாரி வந்திருக்கிறாராம். அவருக்கும் அவசரமாக ராவுஜான் போகவேண்டுமாம். நான் அவரை என்கூட அழைத்துப் போகலாமா? எனக்கு அசௌகரியம் இருக்கிறதா? போலீஸ் இலாகாப் படகு நாளைதான் வரும். என்னுடன் வரவில்லையென்றால் அந்தப் போலீஸ் அதிகாரி ஒருநாள் இங்கேயே காத்திருக்க வேண்டும்.
இந்த ஏற்பாட்டால் எனக்கு அசௌகரியம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இதை எழுத்தில் தெரிவிக்க முடியுமா? நான் கவிதை எழுதி வாழ்ந்தேன்! மனதுக்குள் அந்த அதிகாரியைச் சபித்துக்கொண்டு, போலிச் சிரிப்பு சிரித்தவாறு "ஆகா, இது என் நல்லதிருஷ்டமல்லவா?" என்று சொன்னேன். இன்ஸ்பெக்டர் குதிகாலோடு குதிகாலைச் சேர்த்து ஒரு அழுத்தமான சலாம் செய்துவிட்டுப் போனார்.
நான் நாற்காலியில் சாய்ந்தவாறே எண்ணத் தொடங்கினேன். "மறுத்திருந்தால் என்ன பெரிய பண்புக் குறைவு நேர்ந்திருக்கும்? அந்த அதிகாரி ஒருநாள் தாமதித்தால் வேலை கெட்டுப் போய் விடுமா..?"