வந்த அதிகாரி கான் பகதூரைப் பண்பில் யாரும் விஞ்ச முடியாது. எனக்கு நன்றி கூறப் பொருத்தமான வார்த்தைகள் அவருக்கு வங்காளியில் கிடைக்கவில்லை. ஆகையால் ஆங்கிலத்தையும் உருதுவையும் பயன்படுத்தினார். அவர் ஒரு பஞ்சாபி முஸ்லீம். என்னைவிட வயதில் மிகவும் பெரியவர். மீசை தாடி வைத்துக் கொள்ளாததால் சற்று வயது குறைந்தவராகத் தோற்ற மளித்தார். கலகலப்பான மனிதர். நான் ஒரு எழுத்தாளன் என்பதை இதற்குள் தெரிந்துகொண்டிருந்தார்.
"உங்களைச் சந்தித்துப் பேசணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அந்த ஆசை இப்படித் தீரும்னு யாரு எதிர்பார்த்தாங்க? ஆனா ஒங்க தனிமையைக் கெடுக்க நான் விரும்பவேயில்லே. நான் ஒரு நாள் காத்திருக்கத்தான் நெனைச்சிருந்தேன். எஸ்பி தான் வலுக்கட்டாயமா அனுப்பிட்டார் ஒங்களோட படகுக்கு... செய்தி கேள்விப்பட்டிருப்பீங்களே?" என்றார் கான் பகதூர்.
நான் வியப்புடன் கேட்டேன், "என்ன செய்தி?"
"ரொம்ப மோசமான செய்தி," அவர் என் காதருகில் சொன்னார். "இல்லாட்டி நான் டிரங்க் கால்லே செய்தியைக் கேட்டதும் இப்படி கல்கத்தாவிலிருந்து ஓடி வந்திருப்பேனா..? சீ, வெட்கக்கேடு!"
விஷயம் என்ன என்று தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆவல்தான். ஆனால் எப்படியும் கான் பகதூர் தாமாகவே விஷயத்தைச் சொல்லிவிடுவார் என்று தெரியுமாதலால் எனக்குப் பிறர் பற்றிய வம்பில் அக்கறையில்லாதது போல் பாசாங்கு செய்தேன். "நீங்க இலக்கியவாதிகள். அடிக்கடி 'சத்தியம், சிவம், சுந்தரம்'னு சொல்லுவீங்க. ஆனா சத்தியமாயிருக்கறது சிவமா, அதாவது மங்களமா இல்லே. சுந்தரமாயிருக்கறதும் சிவமில்லே.. இதுதான் நான் என் நாப்பத்தஞ்சு வருஷ அனுபவத்திலே அறிஞ்சுக்கிட்டது. நான் என்னிக்காவது ஒரு புஸ்தகம் எழுதினேன்னா என்ன எழுதுவேன், தெரியுமா? 'அழகான பெண்கள் அநேகமாகக் கெட்டவங்களாயிருப்பாங்க, கெட்ட பெண்கள் பெரும்பாலும் அழகாயிருப்பாங்கன்னு எழுதுவேன்," என்று சொல்லிவிட்டு ஹாஹாவென்று சிரித்தார் கான்பகதூர்.
நானும் சிரித்துவிட்டேன். இருந்தாலும் கூடவே "எங்க வங்காளத்திலே மட்டும் இப்படியில்லே,"