இங்கே வந்தவ அவனுக்கு ஏற்கெனவே கலியாணமாயிருக்குன்னு தெரிஞ்சதும் புருசனோட கழுத்திலே கத்தியாலே குத்திட்டா!"
"அப்படியா? நான் இதைப் பத்திக் கேள்விப்படலியே!"
"முதல்லே புலன்விசாரணைக்கு இன்ஸ்பெக்டர்தான் போனான். ஆனா பர்மாக்காரிக்கு வங்காளி தெரியாதுங்கறதுக்காக இந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் போக வேண்டியதாச்சு. இந்த விசாரணைதான் அவனுக்குக் கேடா முடிஞ்சது.. ஒரு நாளாச்ச, ரெண்டு நாளாச்சு, புலன் விசாரணை முடியலே.. கடைசியிலே ஒரு நாள் குத்தவாளியையுங் காணோம், விசாரணைக்குப் போன அதிகாரியையுங் காணோம்! ஹா ஹா ஹா ..!"
இது சிரிப்புக்குரிய விஷயமல்ல. பெண்கள் கடத்தப்படுவதை அறவே வெறுப்பவன் நான். ஆகவே சற்றுக் கோபத்துடன் அவரைக் கேட்டேன், "பின்னே இவ்வளவு நாள் நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க? ஏன் அவனைக் கைது செய்யலே? இது போலீஸ் இலாகா மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லே, இதிலே கோர்ட்டுக்கும் சம்பந்தமிருக்கே!"
கான் பகதூர் சற்றுக் கடுமையான குரலில் சொன்னார், "கோர்ட்டுக்கு இதிலே சம்பந்தம் இருக்காங்கறது சந்தேகந்தான். அந்த பர்மாக்காரி வயது வந்தவ, விதவை. ஆகையால் அவளை ஆசை காட்டிக் கடத்திக்கிட்டுப் போனதாக் குத்தஞ் சாட்ட முடியாது. குற்றச் சட்டத்திலே எந்தப் பிரிவின் கீழே அவனைக் கைது செய்வீங்க, சொல்லுங்க!"
என்னிடம் பதிலில்லை.
அவர் குறும்பாகச் சிரித்துக்கொண்டு தொடர்ந்தார். "அப்புறம்.. அவங்க கலியாணம் பண்ணிக்கிட்டிருந்தாங்கன்னா..? உம், அவ்வளவு எளிசான விஷயமில்லீங்க இது. அவனை வேலையை விட்டு நீக்கலாம்... கல்கத்தாவிலே இதுக்கான ஏற்பாடு செய்வாங்க. ஆனா அதுக்கு மேலே அவனுக்குத் தண்டனை கொடுக்கணும்னா சட்டத்தை நல்லாப் படிச்சுப் பார்க்கணும்."
அவர் கூறியது உண்மைதான்.. பெரிய மீன் ஒன்று தூண்டிலில் அகப்பட்டுக் கொள்ளாமல் நழுவிப் போய்விட்டால் மீன் பிடிப்பவனுக்கு எப்படி இருக்கும்? அப்படியிருந்தது எனக்கு.