வாங்கிக்கொண்டு வேறோரிடத்துக்கு ஓடிப்போகவும் முடியவில்லை. அவனுடைய அகம்பாவம் அவனை ஓடவிடவில்லை. சூரஜ்பானைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலோ அவனை ஒதுங்கியிருக்கவிடவில்லை. கடமையுணர்வு அவனை ஓடிப்போக அனுமதிக்கவில்லை. அவன் உள்ளூறத் துடித்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது.
"நீ லீவு எடுத்துக்கிட்டு ஊருக்குப் போய்க் கலியாணம் பண்ணிக்கிட்டு வா!" என்று நான் அவனிடம் சொன்னேன். அவன் பேசாமல் கேட்டுக் கொண்டான். பதில் சொல்லவில்லை.
ஒருநாள் சூரஜ்பான் என்னிடம் "மேகர்பான் சிங் உங்க சீநேகிதர்தானே? அவர் ஏன் என் பார்ட்டிக்கெல்லாம் வர்றதில்லே? நீங்க அவரைக் கூட்டிக்கிட்டு வரக்கூடாதா?" என்று கேட்டாள்.
நான் அவளிடம் உண்மையை எப்படிச் சொல்வது "எப்போதும் உண்மையே பேசவேண்டும்" என்ற உபதேசம் பாடப் புத்தகத்துக்குத்தான் பொருந்தும். ஆகையால் எதையோ சொல்லி மழுப்பினேன்.
பிறகு மேகர்பானிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். இதைக்கேட்டு அவன் சஞ்சலமடைந்தான். மகிழ்ச்சியடைவதா அல்லது கோபித்துக் கொள்வதா என்று புரியவில்லை அவனக்கு. அவன் என்னை விட்டுவிட்டுத் தனியே உலவப் போய்விட்டான்.
சூரஜ்பான் அளித்த அடுத்த விருந்துக்கு மேகர்பானும் வந்திருந்தான். நான்தான் அவனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். எனக்குக் கண்ணாடி கிடைத்திருந்தால் அதை மேகர்பானின் முகத்துக்கு நேரே நீட்டியிருப்பேன். ஆனால் கண்ணாடி எதற்கு! சூரஜ்பானின் கண்களேதான் கண்ணாடியாக இருந்தனவே? அவளுடைய அழகிய கருத்த கண்களில் அவன் தன் சிவந்துபோன முகம் பிரதிபலிக்கக் கண்டான்.
ஒன்றிரண்டு கணங்களில் எவ்வளவு பெரிய நிகழ்ச்சியொன்று நடந்துவிட்டது! அதை யாரும் கவனிக்கவில்லை, என்னைத் தவிர.
மேகர்பானைக் கேலி செய்து அவனுக்குக் கோபமூட்ட நினைத்தேன்! ஆனால் துணியவில்லை. அவனுடைய முகத் தோற்றத்தைப் பார்த்துப் பின்வாங்கினேன். அவன் இயந்திரம் போல் தன் கடமைகளைச் செய்தான், நல்ல முறையில் செய்தான். என்னுடன் எப்போதும்போல் பழகவும்