"என்ன யோசனை?" அவனுக்காக அனுதாபம் ஏற்பட்டது எனக்கு.
"நான் அனுபவிச்சதுக்கு விலை கொடுக்க ஆசைப்படுகிறேன்," ஒடுங்கும் குரலில் சொன்னான் அவன், "விலை கொடுக்கலேன்னா நான் அவளோட அடிமையாயிடுவேன். என் கௌரவம் போயிடும்."
நான் சற்றுச் சிந்தித்துவிட்டுச் சொன்னேன்," அவகிட்டே என்ன இல்லே? உன் பணம் அவளுக்கு எதுக்கு? நீ அம்பது ரூபாய் மதிப்புள்ள பரிசு கொடுத்தா, அவ உனக்கு ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு தருவா."
"நான் அவளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு தருவேன்!" அழுத்தந் திருத்தமாகப் பதிலளித்தான் மேகர்பான். "ஆனா அவ்வளவு பணம் எங்கே கிடைக்கும். சர்க்கார் கஜானா வைக் கொள்ளையடிக்கட்டுமா?"
கேட்டுத் திடுக்கிட்டேன் நான். உடனே அவன் வீட்டாருக்குக் கடிதம் எழுதினேன் மூடி மறைத்துக் குறிப்பாக விஷயத்தைத் தெரிவித்தேன். அவனை ஜாக்கிரதையாகக் கண்காணிக்கவும் செய்தேன். கிறுக்குத்தனமாக எங்காவது கொள்ளையடித்து விடுவானோ என்ற பயம் எனக்கு.
அவன் அணிவகுப்புக்குப் போவதைத் தவிர்ப்பதற்காக ஒரு சான்றிதழ் வாங்க டாக்டரிடம் போனான். அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடும்படி நான் டாக்டரிடம் சொல்லி வைத்தேன். அவனை ஊருக்கு அழைத்துப் போக அவனுடைய அண்ணன் வந்தார். லீவு கிடைக்காமல் ஊருக்குப் போவது எப்படி? லீவுக்கு மனு செய்தான். லீவு அனுமதிக்கப்படும்வரை காத்திருக்க நேர்ந்தது.
இதற்கிடையில் ஒர விபரீதம் நிகழ்ந்துவிட்டது. ஒரு நாள் காலையில் மேகர்பானைக் காணவில்லை. விசாரித்துப் பார்த்ததில் சூரஜ்பானையும் காணோம் என்று தெரியவந்தது.
ஊரெங்கும் தூற்றுப் பேச்சு. சூரஜ்பானின் பக்தர்கள் வருத்தப்பட்டார்கள் மேகர்பானுக்காக!