செய்துகொண்டிருக்கமாட்டான். ஒரு வைசியப் பெண்ணை, அதுவும் நடத்தை கெட்டவளைக் கலியாணம்! பங்கு கேட்பவர்களின் தொல்லை தாங்கமுடியாமல், அவள்மேல் தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அவளைப் போட்டியின்றி அனுபவிப்பதற்காகக் கலியாணம் செய்துகொண்டு விட்டான் கடைசியில். கலியாணமானபின் சூரஜ்பான் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். சூரஜ்பான் இதற்குத் தயாராயில்லை இருந்தாலும் கலியாணமானதில் அவளுக்குத் திருப்திதான். ஒரு உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ராஜபுத்திரனைத் திருமணம் செய்து கொள்வது அவளது சிறு பிராயக் கனவு. அந்தக் கனவு நனவாகியதற்காக அவள் சில தளைகளைப் பொறுத்துக்கொள்ள இணங்கினாள். மனைவியைப் பர்தாவுக்குள் வைத்தபின் சற்றுக் கவலை குறைந்தது மேகர் பானுக்கு. இப்போது அவன் வாழ வழி தேடவேண்டும். அதற்காகப் பஞ்சாபுக்கு வெளியே போகத் தீர்மானித்தான் அவன். அங்கெல்லாம் ஒளிவு மறைவாக வாழ வேண்டிய அவசியமில்லை. உண்மையான முறையில் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.
அவன் எங்கெங்கோ சுற்றிவிட்டுக் கடைசியில் அஜ்மீர் வந்து சேர்ந்தான். தன் ராணுவ அனுபவத்தைக் காட்டி ரயில் வேயில் ஒரு வேலை தேடிக் கொண்டான். சம்பளம் அதிகமில்லை, இருந்தாலும் சொந்த சம்பாத்தியம்.
இப்போது ஒரு புதிய பிரச்சினை தலையெடுத்தது. இந்த வேலையில் அவன் மாதத்தில் இருபது நாட்கள் வெளியூர்களில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. போகுமிடமெல்லாம் மனைவியைக் கூட்டிப்போக முடியாது. தனியாக விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. இப்பேர்ப்பட்ட விலை மதிப்பற்ற மாணிக்கத்தை வீட்டில் வைத்துவிட்டு அவன் வெளியூரில் இரவுகளைக் கழித்தால் யாராவது வீட்டில் கன்னம் வைத்து விடுவானே! நகை, துணிமணி, பாத்திரம் பண்டம் திருடப்பட்டதாகப் போலீஸ் ரிகார்டில் எழுதப்படும். ஆனால் உண்மையில் திருடு போன பொருளை எழுதி வைக்க முடியாதே! அந்தப் பொருளுக்கு உரிமையுள்ளவன் வெளியூரில் சுற்றிக் கொண்டிருப்பான்.
மேகர்பான் என்ன செய்வான், பாவம்! அவன் வீட்டைக் கவனிப்பானா, வெளி வேலையைக் காப்பாற்றிக் கொள்வானா? சூரஜ்பானுக்கு இந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அவள் தன் கனவு நனவாகி விட்டதில் திருப்தியடைந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் இந்த முடிவையா மேகர்பான் கனவு கண்டான்!