ஆனால் அவர்கள் போகுமிடங்களிலெல்லாம் சி்றிது காலத்துக்குப் பிறகு அவர்களைப் பற்றிய உண்மை வெளியாகி விட்டது. அதன் பிறகு அங்குள்ள இளவட்டங்கள் சூரஜ்பானின் இளமையையும் அழகையும் பங்கு போட்டுக் கொள்ள முற்பட்டனர். மனைவியல்லாத ஒருத்தியின் அழகை ஒருவனே அனுபவிப்பதை மற்றவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. அவர்கள் காதலரிருவரையும் தொந்தரவு செய்யத் தொடங்கினர். போலீசிடம் உதவிக்குப் போய் பயன் இல்லை. போலீசார் கலியாணம் நடந்ததற்கான ருசு கேட்பார்கள் அல்லது பெரிய தொகையை லஞ்சமாகக் கேட்பார்கள். அழகைப் போட்டியின்றி அனுபவிக்க வேண்டுமென்றால் அதைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. அதன்மேல் சட்டப் பூர்வமான உரிமையும் இருக்க வேண்டும் என்று மேகர்பான் புரிந்து கொண்டான். சூரஜ்பான் தன் மனைவி என்பதற்கான சான்றைக் காட்ட வேண்டும்.
குழம்பித் தவித்தான் அவன். ராஜபுத்திரனான அவன் ஒரு வியாபாரியின் விதவையைக் கலியாணம் செய்து கொள்வதா? அதுவும் நடத்தை கெட்ட சூரஜ்பானை! அவனுக்கு இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. ஏற்கெனவே அவனுக்குத் தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது. இனி அவனது மானம் மண்ணோடு மண்ணாகி விடும். தப்பியோடவும் வழியில்லை என்று கண்டான் மேகர்பான். இனி வேலை கிடைக்காது. சொந்த ஊருக்குப் போய் விவசாயம் செய்வதானால் இரண்டு வேளையும் பெரியவர்களின் ஏச்சைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அவனை யார் கலியாணம் செய்து கொள்வார்கள்? கலியாணம் இல்லாவிட்டால் பெண் துணைக்கு என்ன செய்வது? இந்த வயதிலேயே அவன் சன்னியாசியாக வேண்டுமா?
அவன் எங்கும் ஓடாமலிருப்பதென்றால் ஒன்று, சூரஜ் பானைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டும், அல்லது அவளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு வழிகளுமே பிடிக்கவில்லை மேகர்பானுக்கு. சூரஜ்பானுக்கு இந்த இரண்டுமே பிடித்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது.
பகிர்ந்துகொள்வதைவிடச் சாவது மேல். ஆகையால் கலியாணந்தான் ஒரேவழி. கலியாணப் பேச்செடுத்தாலே அவனது கண்களில் நீர் பெருகியது. இதயம் தவித்தது. அவனது குலப் பெருமைக்கு இழுக்கு, ஆண்மைக்கு அவமானம்..
இந்த மாதிரி ஒரு கட்டாய நிலை ஏற்படாவிட்டால் அவன் கலியாணம்