"பாவம், தற்காலிகமான வெறிக்கு ஆட்பட்டுத் தன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டானே மனுஷன்!" என்று ஒரு சிலர் வேடிக்கையாகப் பேசிக் கொண்டார்கள். "ராஜகுமாரியும் பாதி ராஜ்யமும் கிடைச்சா நாங்களும் ஓடிப்போகத் தயார்..! சூரஜ்பானும் கெட்டிக் காரிதான்! அவளோட காதலன் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன், நல்ல அழகனுங்கூட!"
எனக்குத் தாங்கமுடியாத வருத்தம். மேகர்பானின் அண்ணன் அழுதுகொண்டே ஊர் திரும்பிச் சென்றபோது அவருக்கு விடையளிக்க நானும் சிறிது தூரம் சென்றேன். "எல்லாம் அதிருஷ்டம்" என்றார் அவர். "ஆமா, எல்லாம் கிஸ்மத்துதான்" என்றேன் நான். நாம் இந்துவானாலும் சரி, முஸ்லீமானாலும் சரி, விதியை நம்புபவர்கள். விதி விதிப்பது நடந்தே தீரும்.
மாதங்கள் கழிந்தன. மேகர்பானைப் பற்றிச் செய்தி எதுவுமில்லை. சூரஜ்பானின் வீடு இருண்டு கிடந்தது. அவள் எங்கிருக்கிறாள் என்று அவளுடைய வேலைக்காரர்களுக்குத் தெரியவில்லை.
ஓராண்டுக்குப்பின் அஜ்மீரிலிருந்து அவனுடைய கடிதம் கிடைத்தது. "அஜ்மீருக்கு யாத்திரையாக வாயேன்!" என்று எழுதியிருந்தான். அவனுக்கு என் யோசனை தேவை என்று உணர்ந்தேன். லீவு எடுத்துக்கொண்டு அஜ்மீர் பொனேன். அவன் என்னைச் சந்தித்துத் தன் இருப்பிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனான். அவர்களிருவரும் சந்தோஷமாகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார்கள். சூரஜ்பான் குடும்பப்பெண் மாதிரி நடந்து கொண்டாள். என்னிடம் கூட ஓரளவு பர்தா முறையைக் கடைப்பிடித்தாள்.
அவர்கள் சியால்கோட்டிலிருந்து ஓடிவந்த பின் வெவ்வேறு ஊர்களுக்குப் போனார்களாம். அவர்கள் எங்கே போனாலும் அவர்கள் யார்? அவர்கள் புருஷன் பெண்சாதியா? என்ற கேள்வி அவர்களை எதிர் கொண்டது. சுரஜ்பான் "ஆமா" என்று சொல்லி விடுவாள். ஆனால் மேகர்பான் வாயை மூடிக் கொண்டிருப்பான். அவளைத் தன் மனைவி என்று ஏற்றுக் கொள்ள அவனுக்குத் தயக்கம். அப்படிச் சொல்வது பொய் மட்டுமல்ல. அவனுக்குப் பிடிக்காத விஷயமுங்கூட. ஆனால் அவர்கள் தங்களைக் கண்வன் - மனைவி என்று சொல்லிக் கொள்ளா விட்டால் அவர்களுக்கு வீடு கிடைக்காது, வேலைக்காரன் கிடைக்க மாட்டான், சமூகத்தின் உதவியோ அங்கீகாரமோ கிடைக்காது. வேசிகளின் குடியிருப்பில் போய் வாழ வேண்டி யிருக்கும். இதற்கு இணங்குவாளா சூரஜ்பான்? தன்மானம் மிக்கவள் அவள். அவள் என்ன சாதாரண வேசியா!