(Reading time: 32 - 63 minutes)
சிறுகதை - ராணி பசந்த் - அன்னதா சங்கர் ராய் (சு.கிருஷ்ணமூர்த்தி)

அவன் வீட்டாருக்குத் தகவல் அனுப்பிக் குடும்பத்துப் பெரியவர் யாரையாவது வரவழைக்கத் தொன்றியது எனக்கு. விவகாரம் இன்னும் முற்றிவிடவில்லை. மோசம் நிகழ்ந்து விட வில்லை இன்னும். நல்ல அழகான ஒரு பெண்ணாகப் பார்த்து அவனுக்கு கலியாணம் செய்து வைத்துவிட்டால் ஒரே நாளில் அவனுடைய அசட்டுப் பைத்தியம் தெளிந்துவிடும். அதன் பிறகு சியால்கோட்டிலிருந்து லாகூருக்கோ அமிருதசரசுக்கோ மாற்றலாகிப் போய்விட்டால் சூரஜ்பானின் நினைவு வாண வேடிக்கைபோல் அணைந்து போய்விடும்.

  

ஆனால் மேகர்பானின் குடும்பத்துக்குச் செய்தியனுப்பத் துணிவு ஏற்படவில்லை எனக்கு. அவன் கோபித்துக் கொள்வானே என்ற பயம். அவன் சாதாரணமாக நிதானமானவன்தான். ஆனால் கோபம் வந்துவிட்டால் கண்மண் தெரியாது அவனுக்கு.

  

இதன்பிறகு ஒரு நாள் சூரஜ்பான் அளித்த விருந்துக்கு நானும் போனேன், அவனும் போனான். அன்றே எல்லாம் ஜாடை மாடையாக ஏற்பாடாகி விட்டது.

  

சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் நான் அணிவகுப்புக்குப் போக உடையணிந்து கொண்டிருந்தபோது மேகர்பான் அங்கே வந்தான். அவனது உடலுறுப்பு ஒவ்வொன்றிலும் மகிழ்ச்சிக் கிளர்ச்சி. ஆனால் அவன் அதை மறைத்துக் கொண்டு வருத்தக் குரலில் "நான் செத்துப் போயிட்டேன்!" என்றான்.

  

அவன் என்ன சொல்கிறான் என்று நான் புரிந்து கொண்டாலும் புரியாதவன்போல, "என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.

  

"நான் ராணிபசந்த் ஆயிட்டேன்" என்றான் சோகக் குரலில்.

  

"நீ செய்யறது சரியில்லே. அதுக்கு அடையாளம் நீ இப்போ அணி வகுப்புக்கு மட்டம் போடறதுதான். இப்படிப் பண்ணினா உனக்கு வேலை போயிடும்!" நான் சொன்னேன்.

  

அவன் பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னான், "எனக்கு வேற வழியிலே. விதி என்னை எங்கேயோ இழுத்துக்கிட்டுப் போகுது.. நீ என் சிநேகிதன், எனக்கு ஒரு யோசனை சொல்லுவியா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.