ஆனால் இதற்காக வருத்தப்படவில்லை கான் பகதூர். அவர் சொன்னார், "அவங்க சிட்டகாங் மலைப் பிரதேசத்திலே ஒளிஞ்சுகிட்டிருக்கறதாகக் கேள்வி. அங்கேயிருந்து நடந்தே பர்மா போவாங்க போலிருக்கு.. அதுக்கப்புறம் அவனுக்கு எவ்வளவு நாள் பர்மிய அழகியோட தயவு இருக்குமோ, யார் கண்டாங்க! அவ அவனைக் கொஞ்சநாள் குரங்காட்டம் ஆட்டிப்பிட்டுப் பிறகு கொன்னு போடுவாளோ, அல்லது உதைச்சு விரட்டப் போறாளோ..! நான் அழகான முகத்தைப் பார்த்தா, தூரத்திலிருந்தே அதற்கு ஒரு சலாம் போட்டுட்டு நகர்ந்து போயிடுவேன்."
என்னிடம் அப்போது சட்டப் புத்தகம் எதுவுமில்லை. ஆகையால் ஒரு குற்றவாளி தப்பியோட உதவுபவனுக்குச் சட்டத்தில் தண்டனையேதும் உண்டா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை என்னால். ஆனால் உள்ளூரச் சங்கடப் பட்டேன். இதைக் கவனித்த கான் பகதூர் சொன்னார், "நான் போலீஸ்காரனாயிருக்கறதாலே போலீஸ்காரன் மேலே எனக்கு அனுதாபம், நான் முஸ்லீமாயிருக்கறதாலே இன்னொரு முஸ்லீம் மேலே எனக்குப் பரிவுன்னு நீங்க நினைக்கலாம். ஆனா அப்படியில்லே. அவன் ஒரு ஆம்பளைங்கறதால அவன் மேலே அனுதாபப் படறேன்.. அந்தப் பொண்ணுதான் அவனைக் கடத்திக் கிட்டுப் போயிருக்கா!"
நான் இயற்கையிலேயே பெண்களிடம் அனுதாபங் கொண்டவன். ஆகவே அவரது கூற்றை மறுக்காமலிருக்க முடியவில்லை என்னால். நான் சொன்னேன், "பெண்களிடம் சிறிதாவது மதிப்புள்ள எவனும் அவங்களைக் குத்தஞ் சொல்ல முடியாது. எப்போதும் குத்தம் ஆண்களோடதுதான்.. ஆனால் சில சமயங்களிலே ஆண் மேலயும் குத்தமில்லாமே, பெண் மேலயும் குத்தமில்லாமே இருக்கலாம். அப்போது சொல்ல வேண்டியது இயற்கையைத் தான், விதியைத் தான்."
"ஆமா, ஆமா, அது சரி! விதிதான் குத்தவாளி!" கான் பகதூர் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். "இதே மாதிரி விதியின் விளையாட்டு ஒண்ணை நான் என் இளம்வயசிலே பார்த்திருக்கேன். என் சிநேகிதன் ஒருத்தன் வாழ்க்கையிலே.. அவன் இந்து. அடே, இதென்ன? இந்துவும் முஸ்லீமும் நண்பர்களா, என்று நீங்க நினைக்கலாம். ஆனா இப்போ இருக்கிற மோசமான சூழ்நிலை இருபது வருஷத்துக்கு முன்னாலே இல்லே. நாங்க முதல் உலக யுத்தம் முடிஞ்சப்புறம் மிலிட்டரியை விட்டு வந்து போலீஸ் வேலையிலே சேர்ந்தபோது இந்து முஸ்லீம் பாகுபாடு கிடையாது. அந்தக் காலம் திரம்பி வராதா..?"