என்று சொன்னேன்.
கேலியாகப் பேசினார் கான்பகதூர், "உம், வங்காளத்திலே இல்லையாக்கும்! வங்காளத்திலே வேலை பார்த்துப் பார்த்துத் தலை நரைச்சுப் போச்சுங்க.. நான் இப்போ போயிக்கிட்டிருக்கேனே ராவுஜானுக்கு. அந்த ராவுஜான் வங்காளத்துக்கு வெளியில இருக்கா?"
உரையாடல் சுவாரசியமாகத் தொடர்ந்தது. நான் என் சமையற்காரனைக் கூப்பிட்டேன். அதற்குள் அவர் என்னை இடைமறித்து, "இல்லேயில்லே நீங்க என்னோட விருந்தாளி!" என்றார்.
நல்ல வேடிக்கை! பார்க்கப்போனால் படகே என்னுடையது, நான் எப்படி அவருடைய விருந்தாளி ஆவேன்? ஆனால் என் பேச்சு எடுபடவில்லை. அவரே மாலை நேரச் சிற்றுண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். இதற்குள் படகு துறையைவிட்டுக் கிளம்பி விட்டது.
நாங்களிருவரும் சாய்வு நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு மலைவரியைப் பார்த்தவாறு அருகருகே வசதியாக உட்கார்ந்தோம். கான் பகதூர் பேசத் தொடங்கினார்..
"அவன் சாதாரண ஆளில்லே. ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர். ஒரு காலத்திலே நான் அவனோட சூபரின்டென்டாயிருந்தேன், அவனோட வேலையைப் பாராட்டியிருக்கேன். அவன் கிறுக்கு இல்லே, கவி இல்லே... நான் சொல்றதுக்கு மன்னிக்கணும் ஒழுங்கான நடத்தையுள்ளவன்னு நல்ல பேரும் இருந்தது அவனுக்கு. இப்படிப்பட்டவன் திடீர்னு வேலையைத் துறந்துட்டு, குழந்தை குட்டிகளை மறந்து காணாமப் போயிட்டான். நல்லவேளை அவனோட மனைவி உசிரோட இல்லே!"
"காணாமப் போயிட்டானா?" நான் திடுக்கிட்டேன்.
அந்த வெக்கக்கேட்டை ஏன் கேக்கறீங்க!" கான் பகதூர் பட்டுக் கைக்குட்டையால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்.: "ஒரு கொலையைப் பத்தி விசாரிக்கப் போயிருந்தான். கொலை செய்யப்பட்டவன் ஒரு வங்காளி முஸ்லீம். அவன் ரங்கூன்லேருந்து ஒரு பர்மாக்காரியைக் கலியாணம் பண்ணி கூட்டிக்கிட்டு வந்திருந்தான். அவ ஒரு பிசாசுதான். ரொம்ப அழகாயிருப்பாளாம். பர்மாவிலேயே அவ மாதிரி அழகி இல்லையாம்.. புருசனோட