அழத் தான் செய்வான்.
அப்துல் ஆற்றுநீரில் கண்களைத் துடைத்தவாறு விம்மினான், "குச்சியோட வெலையையும் அதுக்கான வட்டியையும் சம்பளத்திலேருந்து எடுத்துக்கப் போறாரு, அதோடே இந்த அடி வேறே அடிக்கறாரு!"
அப்படியும் சாரங்கை எதிர்த்துப் பேச முடியாது. தனக்கு சாதகமாக இரண்டு வார்த்தை சொல்ல முடியாது. அடிக்கும்போது திமிற முடியாது.
இவர்களெல்லாருமே தன்னைப் போல் தந்தை, தாயில்லாத அனாதைகள் போலும் என்று நினைத்தான் நசீம்.
படகின் படிக்கட்டு வேலையிலிருந்து தொடங்கிப் பதவி உயர்வு வேண்டுபவர்கள் தாம் எல்லாரும். அவர்கள் எல்லாருக்கும் சாரங்கின் சான்றிதழ் தேவை. சாரங்க் அடிப்பதை அனுமதிக்கா விட்டால் அவன் ஏன் பேனாவைக் கையிலெடுத்து சான்றிதழ் எழுதித் தரவேண்டும்.
ஆகவே தான் அன்றொரு நாள் நசீம் மக்பூலுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டவாறு தவறுதலாக ஒரு வாளியைத் தண்ணீரில் போட்டுவிட்டதற்காக நன்றாக உதை பட்ட போது அவனுக்கு வெட்கம் ஏற்படவில்லை. அவமான உணர்வு துளிக் கூடத் தோன்றவில்லை அவனுக்கு. மாறாக அவன் மனதில் மற்ற ஊழியர்களுடன் தோழமையுணர்வு ஏற்பட்டது.
"ஒனக்கென்ன சம்பளம் கிம்பளம் கிடையாது. சும்மா அடி யோட சரி" என்று அழுதுகொண்டே சொன்னான் மக்பூல். "வாளியோட வெலைக்காக என் சம்பளம் பூராவையும் எடுத்துக்குவாரு, எனக்குச் சோத்துக்கு காசு வேணும்னா, தன் கிட்டேயிருந்து கடன் வாங்கிக்கன்னு சொல்வாரு. ரூபாய்க்கு ரெண்டணா வட்டி படகிலே ஒக்காந்து கிட்டே லேவாதேவி செய்யறாரு.. உம், நம்மளைக் கவனிக்க ஆளில்லே," என்று சொல்லி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான் மக்பூல், கடவுளிடம் புகார் செய்வது போல்.
"நீ வேற படகுக்குப் போயிடக் கூடாதா?" நசீம் கேட்டான்.